இதுதான் தங்கம் தென்னரசு.. நெகிழ்ந்து போன திருநெல்வேலி பேச்சியம்மாள்.. கலெக்டருக்கு பறந்த உத்தரவு
திருநெல்வேலி: திருநெல்வேலியைச் சேர்ந்த பேச்சியம்மாளுக்கு அடிப்படை தேவைகளான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு பதிவிட்டுள்ளார். அவருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். செய்தியை கவனத்திற்கு கொண்டுவந்தவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை வந்து வழங்கினர்.

நேற்று வந்தவர்களில் ஏராளமான பெண்கள் மகளிர் உரிமைத்தொகை கேட்டே மனு கொடுத்தனர். இதற்காக கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து மனு அளித்தனர். இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் உள்ள இளங்குளைத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் என்ற மூதாட்டி ஆவார். இவர் 10 வருடங்களாக முதியோர் உதவி தொகை கேட்டு, இளங்குளம் விஏஓ அலுவலகம் மற்றும் நாங்குநேரி தாலுகா அலுவலகம், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலத்திற்கு அலைந்து வந்துள்ளார்.
ஆனால் அவருக்கு இதுவரையில் முதியோர் உதவி தொகை கிடைக்கவில்லை.. மூதாட்டி பேச்சியாம்மாளுக்கு ஆதரவு தந்து பராமரிக்க யாரும் இல்லை என்று கூறிய பெண் ஒருவர், அவரை தாங்கள் பராமரித்து வருவதாகவும், உதவி தொகை தந்து உதவினால் அந்த மூதாட்டிக்கு உதவியாக இருக்கும் என்று செய்தி நிறுவனங்களுக்கு பேட்டி கொடுத்தார். இந்த செய்தி ஊடகங்களில் வெளியான நிலையில் தினகரன் ராஜாமணி என்ற செய்தியாளர், நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார். குறிப்பிட்டசெய்தி வீடியோவை பார்த்த அமைச்சர் தங்கம் தென்னரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க திருநெல்வேலி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுபற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்த செய்தியை எனது கவனத்திற்கு கொண்டுவந்ததற்கு தினகரன் ராஜாமணிக்கு நன்றி. இந்த செய்தி குறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரிடம் பேசி தீர்வுகாண அறிவுறுத்தினேன். அதன்படி உரிய நேரத்தில் பேச்சியம்மாள் அவர்களுக்கு அடிப்படை தேவைகளான உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகள் போன்ற ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மூதாட்டி பேச்சியம்மாள் அவர்களின் குடும்பத்தினர் அவரை பராமரித்துக்கொள்ள முன்வந்துள்ளதால் உரிய ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications