மோடி ஆட்சியை இழந்த அடுத்த நொடியே எடப்பாடி ஆட்சி டிஸ்மிஸ் ஆகும்.. மு.க. ஸ்டாலின் ஆவேசம்
Recommended Video

திருநெல்வேலி: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கைக்கு பின் மோடியின் செல்வாக்கு சரிந்து வருவதாக கூறிய ஸ்டாலின், மோடியின் ஆட்சி அகற்றப்பட்ட அடுத்த நொடி, எடப்பாடி ஆட்சி நிச்சயம் அகற்றப்படும் என்றார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் ஞானதிரவியத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
பாளையங்க்கோட்டை பெல் திடலில் நடந்த இந்த பிரச்சார கூட்டத்தில் வேட்பாளர் ஞானதிரவியம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர் பங்கேற்றனர். அப்போது ஸ்டாலின் பேசியதாவது:

திமுக எதிரியல்ல
"திராவிட முன்னேற்ற கழகம் இந்துக்களுக்கு விரோதமான கட்சி என்ற ரீதியில் தவறான பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் உண்மை அல்ல, திமுக இந்து மதத்திற்கு மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. இந்து மதம் பாஜகவுக்கு மட்டும் சொந்தமில்லை. அனைவருக்கும் சொந்தம். நாங்கள் அனைத்து மதத்தையும் அரவணைத்து செல்வோம்.

அர்ச்சகர் சட்டம்
திமுக ஆட்சி காலத்தில் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு நடந்தது. கருணாநிதி முதல்வராக இருந்த போதுதான் ஆகம நூல்களை பதிப்பித்து வெளியிட்டார். கோயில்களில் இசைப்பயிற்சியும், திருக்குறள் இசைப்பயிற்சியும் கொண்டுவந்தவர் கருணாநிதி. அனைத்து மதத்தினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தை நிறைவேற்றியவர் கருணாநிதி. கொள்ளைபோன கோயில் சிலைகளை கண்டுபிடிக்க சிறப்பு குழு அமைக்ககப்பட வேண்டும்.

மோடி ஆட்சி அகற்றம்
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின் பிரதமராக உள்ள மோடியின் செல்வாக்கு சரிந்து வருகிறது. எனவே மோடியின் ஆட்சி மத்தியில் அகற்றப்பட்ட உடன் அடுத்த நொடி எடப்பாடி தலைமையிலான அதிமுக ஆட்சி நிச்சயமாக அகற்றப்படும். இதனை நான் உறுதியாக சொல்கிறேன் மோடி ஆட்சியை விட்டுப்போன பின்னர், எடப்பாடி ஆட்சி அடுத்த நொடி அகற்றப்படும்.

கண்டுகொள்ளாத மக்கள்
மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும், 18 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி நிச்சயம் வெல்லும் என நம்புகிறேன். எடப்பாடி பழனிச்சாமி தன்னை எம்ஜிஆர் ஆக நினைத்துக்கொண்டு கூட்டங்களில் பேசுகிறார்.ஆனால் மக்களை அவரது பேச்சைக் கண்டுகொள்ளாமல் போனில் மூழ்கி கிடக்கிறார்கள்.இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதை நீங்களே பார்த்து இருப்பீர்கள்.

சசிகலா காலில்
எடப்பாடி தன்னை விவசாயி என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் ஒரு விஷவாயு. அவரை மண்புழு என்று விமர்சித்தேன். ஆனால் எடப்பாடி விவசாயிகளூக்கு நல்லது செய்யும் மண்புழு என்கிறார். ஆனால் எடப்பாடி மண்புழு தான் அவர் மண்ணுக்குள் போகவில்லை. சசிகலாவின் காலுக்கு கீழ் போனவர்.

தவித்துப்போனேன்
தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர் இடம் வேண்டும் என்று எடப்பாடியை பார்த்து கேட்டோம். அண்ணா சமாதியில் இடம் கொடுக்க வேண்டும் என்றோம். ஆனால் தரவிலை. நீதிமன்றத்தில் போய் முறையிட்டோம். அப்போது கட்சி தொண்டர்கள் என்ன நடக்கும் என்பது தெரியாமல் தவித்தனர். எனது தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்று குழுங்கி கொண்டிருந்தேன். ஆனால் நீதிமன்றம் கலைஞருக்கு இடம் தர வேண்டும் என உத்தரவிட்டது.

ஆட்சி மாற்றம்
தலைவர் கருணாநிதியினை பற்றி தவறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமிக்கு தண்டனை கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நா கூசாமல் பேசிய இவரது ஆட்சி அகற்றப்பட வேண்டும். தலைவர் கருணாநிதியின் மகனாக கேட்கிறேன். இந்த ஆட்சியை அகற்ற வாய்ப்பு தாருங்கள்" இவ்வாறு பேசினார்.












Click it and Unblock the Notifications