மும்பை போன் கால்.. பெண்ணுடன் அடிக்கடி பேச்சு.. நெல்லை ஜெயக்குமார் வழக்கில் புதிய தகவல்
நெல்லை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் தினமும் வெளியாகி வருகிறது. மும்பையில் இருந்து ஒரு போன் அழைப்பு குறித்தும், ஒரு பெண்ணுடன் ஜெயக்குமார் அடிக்கடி பேசியது குறித்தும் தனிப்படை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர், கே.பி.கே.ஜெயக்குமார் தனசிங். பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த இவர், தன் சிறு வயதிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர்.இவரது மனைவி ஜெயந்தி, இவர்களுக்கு கருத்தையா ஜெஃப்ரின், ஜோ மார்ட்டின் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளர். ஜெயக்குமார் தனது குடும்பத்தினருடன் திசையன்விளை அருகேயுள்ள கரைசுத்து புதூர் கிராமத்தில் வாழ்ந்து வந்தார்.

இந்த நிலையில், ஜெயகுமார் காணாமல் போனார். அவரை தேடி பார்த்த போது, கடந்த மே 4-ம் தேதி, அவருக்குச் சொந்தமான தோட்டத்தில் எரிந்த நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். 'கொலையா... தற்கொலையா..?' என்று பல்வேறு யூகங்கள் கிளம்பின. ஆனால் கை கால், இடுப்புப் பகுதிகளை மின்சார வயர்களால் கட்டிய நிலையில், தீயில் எரிந்த ஜெயக்குமார், கொல்லப்பட்டிருக்கலாம் என்றே போலீசார் முடிவுக்கு வந்தனர்.
ஜெயக்குமாரை கொலை செய்தது யார் என்பது இன்று வரை தெரியவில்லை. பல கட்ட விசாரணைக்கு பிறகும் துப்புக்கிடைக்கவில்லை.. கடந்த மே 2-ம் தேதி இரவு 7:45 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இந்த சூழலில் ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப்பட்ட பின்னர். நெல்லை மாவட்ட எஸ்.பி-க்கு, ஏப்ரல் 30-ம் தேதி கையெழுத்திட்டு அவர் எழுதிய கடிதம் குறித்த தகவல் வெளியானது..
இதில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்த ஜெயக்குமார், முன்னாள் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தங்கபாலு, நாங்குநேரி எம்.எல்.ஏ ரூபி மனோகரன் உள்ளிட்ட எட்டுப் பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, 'அவர்கள் என்னிடம் வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க வில்லை. அது தொடர்பாகக் கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருந்தார். மேலும் எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அவர்களே பொறுப்பு' எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை மரண வாக்குமூலம் என்றே எழுதியிருந்தார்.
இன்னொரு கடிதத்தை, தன் மருமகன் ஜெபாவுக்கு எழுதியிருக்கிறார். அதில், 16 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களில் யாரிடமிருந்து பணம் வர வேண்டும், யாருக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்பது பற்றி எழுதியிருந்தார்.. இந்த கடிதங்களைகைப்பற்றி போலீசார் விசாரணையில் இறங்கினார்கள். முதலில் காங்கிரஸ் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்தார்கள். அடுத்ததாக அவரது மகன் கருத்தையா ஜாப்ரினை தனி அறையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஆனால், இந்த கொலையில் போலீசாருக்கு சிறிய தடயம் கூட கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஜெயக்குமாரின் குடும்பத்தினருடன் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இறங்கினர். ஜெயக்குமாரின் மகன் ஒருவரது தொலைபேசி நம்பரை ஆய்வு செய்தபோது, ஜெயக்குமார் இறப்பதற்கு முன்பு, தொடர்ச்சியாக மும்பையில் இருந்து போன் கால் ஒன்று ஜெயக்குமார் மகனுக்கு வந்திருக்கிறது. அதேபோல், ஜெயக்குமார் மகனும், அதே நம்பருக்கு தனது செல்போனில் இருந்து அடிக்கடி பேசியுள்ளார்.
எனவே, மும்பையில் இருந்து ரவுடிகள் யாரேனும் வரவழைக்கப்பட்டு ஜெயக்குமார் கொல்லப்பட்டாரா, அவர் மரணத்திற்கும், மும்பை போன் காலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதேபோல் ஜெயக்குமாருக்கு வேறொரு பெண் ஒருவருடன் அடிக்கடி பேசியதாகவும் கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அந்த பெண்ணையும் தனிப்படை போலீசார் நேரில் வரவழைத்து தீவிர விசாரணை நடத்தி வருகிறனர். விரைவில் ஜெயகுமார் வழக்கில் துப்பு துலங்கும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications