அதெல்லாம் கீழ்மட்டம்.. நயினார் நாகேந்திரன் ஒரே போடு.. பாஜக-அதிமுக கூட்டணி தொடர்வதாக திட்டவட்டம்
நெல்லை: அதிமுக- பாஜக கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை என பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக அதிமுக- பாஜக இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் வரை இரு தரப்பினரும் ஒற்றுமையாக இருந்தது போல் தெரிந்தது. ஆனால் எப்போது அதிமுக ஆளும் கட்சியாகவில்லையோ அப்போது முதலே எதிர்ப்பு மேலெழுந்தது.
இது அடுத்தடுத்த உள்ளாட்சித் தேர்தல், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களிலும் எதிரொலித்தது. இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணி உறுதி என ஒரு சிலர் கூறி வந்தாலும் மறு சிலர் எதிரும் புருமான கருத்துகளையே கூறி வந்தனர்.

சென்னை பாஜக கூட்டம்
இந்த நிலையில்தான் அண்மையில் சென்னை அரும்பாக்கத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை. பாஜக வளர வேண்டும் என்றால் தனித்து போட்டியிடுவதுதான் சரி. ஒரு வேளை நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் நான் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன் என அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

பாஜக எம்எல்ஏ வானதி
இதற்கு மேடையிலேயே வானதி சீனிவாசன், கரு நாகராஜன், நாராயணன் திருப்பதி உள்ளிட்ட சீனியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக சொல்லப்பட்டது. கூட்டணி என்பது தேசிய தலைமைதான் முடிவெடுக்கும். மேலும் கூட்டணி குறித்து பேசுவதற்கு தற்போது தேர்தல் ஏதும் வரவில்லை, அப்படியிருக்கும் போது தேவையில்லாமல் கூட்டணி குறித்து பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

ஜெயக்குமார் கருத்து
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்ட போது அவர் கூறுகையில் அண்ணாமலை இந்த கருத்துகளை கட்சி கூட்டத்தில்தானே சொன்னார். இதை அவர் பொதுவெளியில் சொல்லட்டும் நான் பதில் சொல்கிறேன் என்றார். அது போல் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர் ஆதிராஜாராம், அண்ணாமலை கூறியதை வரவேற்று பேசியிருந்தார்.

அதிமுக- பாஜக கூட்டணி
இதனால் அதிமுக - பாஜக இடையே கூட்டணி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நெல்லையில் செய்தியாளர்களுக்கு பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசுகையில் தமிழகத்தை பொருத்தவரையில் மிகப் பெரிய கட்சிகளில் அதிமுகவும் ஒன்று. அது போல் இந்திய அளவில் பாஜக மிகப் பெரிய கட்சி. உலக அளவில் அதிக எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் கொண்ட கட்சியாக பாஜக திகழ்ந்து வருகிறது. தற்போது நாங்கள் அதிமுகவுடன் கூட்டணியில்தான் இருக்கிறோம்.

கீழ் மட்டத்தில் இருப்போர்
அதிமுக- பாஜக கூட்டணி தற்போது வரையிலும் நீடிக்கிறது. கீழ் மட்டத்தில் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரச்சினைகளை ஏற்படுத்துகிறார்கள். அது இருக்கத்தான் செய்யும். இப்போது இருக்கும் பிரச்சினைகளையெல்லாம் தேர்தல் அறிவிப்பு வந்ததும் மறந்துவிட்டு வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் ஒன்றுபட்டு வேலை செய்வார்கள் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அண்ணாமலை கூட்டணி குறித்து பேசிய போதே இது அவருடைய சொந்த கருத்து என நயினார் நாகேந்திரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications