நயினாருக்கு செக்.. அந்த 2 தொகுதிகளையும் அதிமுகவுக்கு ஒதுக்குங்க.. எடப்பாடி பழனிசாமிக்கு சென்ற கடிதம்
நெல்லை: 2026 சட்டமன்றத் தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை ஆகிய 2 தொகுதிகளையும் அதிமுகவினருக்கு ஒதுக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட அதிமுக தொண்டர்கள் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளனர். நெல்லை தொண்டர்களின் கடிதம் காரணமாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு செக் வைக்கப்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைத்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் அதிமுக தலைமையில் பாஜக போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக அக்கட்சி நிர்வாகிகள் பொதுவெளிகளில் கருத்து சொல்லக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

இதன் காரணமாக இரு பக்கமும் அமைதி காத்து வருகின்றனர். அதேபோல் அதிமுக தரப்பில் சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். இருப்பினும் அதிமுக தொண்டர்கள் இடையே ஒரு குழப்பம் ஏற்பட்டு உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இருப்பதால், அக்கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று குழம்பியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் தென் மாவட்டத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தென் மாவட்டங்களில் தான் மோசமான தோல்விகளை பெற்றது. நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் 2வது இடத்தை கூட அதிமுகவினரால் பிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக தொண்டர்கள் சார்பாக எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு ஒதுக்க வேண்டும். 2 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்படவில்லை என்றால், இனி வரும் காலங்களில் அதிமுக கட்சியும் தொண்டர்களும் அழிந்து நெல்லையில் அதிமுக இல்லை என்ற நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்ட எம்எல்ஏ-வாக நயினார் நாகேந்திரன் இருந்து வருகிறார். பாஜகவைச் சேர்ந்தவர் என்பதோடு, மாநிலத் தலைவராக இருப்பதால், மீண்டும் நெல்லை தொகுதி அவருக்கு ஒதுக்கீடு செய்ய வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதி இருப்பது, அந்த மாவட்டத்தில் அதிமுக - பாஜக தொண்டர்களிடையே ஒத்திசைவு இல்லை என்றும் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications