வெளியூர் ஓடும் திமுக கவுன்சிலர்கள்! நெல்லை மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரிய ட்விஸ்ட்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் தான் 3 குழுக்களாக பிரிந்து திமுக கவுன்சிலர்கள் திருநெல்வேலியை விட்டு வெளியூர் செல்ல திட்டமிட்டுள்ள நிலையில் அதன் பின்னணி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகள் உள்ளன. இந்த மாநகராட்சி தேர்தலில் திமுகவை சேர்ந்தவர்கள் 44 வார்டுகளில் வெற்றி பெற்றனர். இதனால் திருநெல்வேலி மாநகராட்சியை திமுக கைப்பற்றியது.

இதையடுத்து திமுக சார்பில் மேயராக சரவணன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் தான் மேயர் சரவணனுக்கும், அங்குள்ள திமுக கவுன்சிலர்களுக்கும் இடையே நல்ல உறவு இல்லை.
இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் அடிக்கடி திமுக கவுன்சிலர்கள் சொந்த கட்சியின் மேயரான சரவணனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வந்தனர். அதோடு அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளையும் சுமர்த்தினர். இதனால் திமுக கவுன்சிலர்கள் மற்றும் மேயர் சரவணன் இடையேயான பிரச்சனை பகிரங்கமானது. அதோடு பாளையங்கோட்டை எம்எல்ஏ அப்துல் வஹாப் மற்றும் மேயர் சரவணன் இடையே சுமூக உறவு இல்லாததும், அப்துல் வஹாப் ஆதரவு கவுன்சிலர்கள் தான் மேயருக்கு எதிராக குற்றம்சாட்டி வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன் நேரு உள்ளிட்டவர்கள் நெல்லை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள், மேயர் சரவணனிடம் பேசினர். அப்போது இருதரப்பிடமும் பிரச்சனையை கைவிடும்படி கூறினர். ஆனால் கவுன்சிலர்கள் அதனை காதில் வாங்கவில்லை. இதையடுத்து சில கவுன்சிலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனாலும் பிரச்சனைக்கு முடிவுக்கு வரவில்லை. தொடர்ந்து மோதல் இருந்து வருகிறது.
இதற்கிடையே தான் கடந்த மாதம் மேயர் சரவணனுக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். திமுக கவுன்சிலர்கள் 38 பேர் கையெழுத்திட்டு மாநகராட்சி ஆணையர் தாக்கரேவிடம் அதற்கான தீர்மானத்தை வழங்கினர். இதையடுத்து நாளை நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார்.
இது திமுக தலைமைக்கு தலைவலியை ஏற்படுத்தியது. அதாவது சொந்த கட்சியின் மேயருக்கு எதிராக 38 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது கட்சி தலைமை முக்கிய பிரச்சனையாக பார்த்தது. இதையடுத்து நேற்று முன்தினம் அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக கவுன்சிலர்கள், மாவட்ட செயலாளர் மைதீன் கான், எம்எல்ஏ அப்துல் வஹாப் உள்பட முக்கிய நிர்வாகிகளை அழைத்து பேசினார்.
அப்போது சொந்த கட்சி மேயர் சரவணனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது சரியல்ல. இது கட்சி தலைமையின் உத்தரவை மீறுவது போன்றதாகும். இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் இன்று திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலர்கள் 3 குழுக்களாக வெளியூர் செல்ல உள்ளனர். அதாவது எம்எல்ஏ அப்துல் வஹாப், முன்னாள் அமைச்சர் மைதீன் கான் உள்பட 3 பேரின் தலைமையில் அவர்கள் வெளியூர் புறப்பட தயாராகி வருகின்றனர். இவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அது தோல்வியடையும். இதன்மூலம் திமுக மேயராக மீண்டும் சரவணன் தொடர்வதோடு, திருநெல்வேலி மாநகராட்சியில் சொந்த கட்சி கவுன்சிலர்கள் மூலமாகவே திமுக மேயர் பதவி இழந்தார் என்ற பெயர் வருவதை தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications