"ஆக்சிஜன் நர்சஸ்".. தமிழகத்தில் மிக குறைவான O2வை பயன்படுத்தும் நெல்லை.. அசத்தும் விஷ்ணு ஐஏஎஸ் மாடல்
திருநெல்வேலி: தமிழ்கத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் மிக குறைவான ஆக்சிஜனை பயன்படுத்தும் மாவட்டமாக திருநெல்வேலி உருவெடுத்துள்ளது... அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வேணுகோபால் களமிறக்கி புதிய முறை ஒன்றால், தமிழகத்திலேயே திருநெல்வேலியில்தான் மிக குறைவாக ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தினசரி கேஸ்கள் கொஞ்சம் குறைந்தாலும் கூட, இன்னும் முழுமையாக கேஸ்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. உள்மாவட்டங்களில் கேஸ்கள் வேகமாக அதிகரித்து வருகிறது. முக்கியமாக திருநெல்வேலி, கோவை, மதுரை, குமரி மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி 37,453 பேருக்கு திருநெல்வேலியில் இதுவரை கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக 6625 பேர் உள்ளனர். 308 பேர் இதுவரை பலியாகி உள்ள நிலையில் 30520 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

எப்படி
இதற்காக திருநெல்வேலி ஆட்சியர் வி விஷ்ணு முக்கியமான திட்டம் ஒன்றை களமிறக்கி உள்ளார். திருநெல்வேலி நிறைய நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதிலும்ம் இரவு நேரங்களில் புதிய ஆக்சிஜன் சப்ளை வரும் நேரங்களில் அதிக தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சமயங்களில் பக்கத்து மாவட்டங்களில் கடன் வாங்கும் நிலை கூட ஏற்படுகிறது.

தட்டுப்பாடு
புதிய நோயாளிகள் பலருக்கும் ஆக்சிஜன் தேவை இருப்பதால், அதை முறையாக பகிர்ந்து அளிக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. இப்படி பல சிக்கல்கள் இருந்தும் கூட திருநெல்வேலி மிக குறைவான ஆக்சிஜனை பயன்படுத்தி உள்ளது. இதற்கு காரணமாக திருநெல்வேலி ஆட்சியர் விஷ்ணு களமிறக்கிய ஆக்சிஜன் நர்ஸ்கள் என்ற மாடல்தான்.

நர்ஸ்
ஆக்சிஜன் நர்ஸ்கள் மாடலின்படி அடிக்கடி நோயாளிகளின் ஆக்சிஜன் அளவு (அதிகபட்சம் ஒவ்வொரு மணிக்கு ஒருமுறை) தொடர்ந்து கண்காணிக்கப்படும். இதில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்கும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் ஆக்சிஜன் கொஞ்சமாக குறைக்கப்படும். அதாவது ஒரே நோயாளிக்கு அதிக ஆக்சிஜனை முறையின்றி கொடுத்து, அதை வீணாக்காமல், முறைப்படுத்தி, அவர்களின் தேவைக்கு ஏற்ப ஆக்சிஜன் வழங்கப்படுகிறது.

கண்காணிப்பு
இதற்காக தனியாக ஒவ்வொரு மருத்துவமனையிலும் நர்ஸ்கள் சிலர் ஷிப்ட் போட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களின் ஒரே பணி நோயாளிகளின் ஆக்சிஜன் அளவை சோதித்து. அவர்களுக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு ஆக்சிஜனை மட்டும் கொடுப்பது. சரியான அளவு ஆக்சிஜனை எல்லா நோயாளிகளுக்கும் கொடுப்பதுதான் இவர்களின் நோக்கம்.

இரண்டு நாட்கள்
திருநெல்வேலியில் தொடக்கத்தில் சில நாட்கள் ஆக்சிஜன் அதிகம் வீணாகி உள்ளது. அதிக ஆக்சிஜன் கொடுக்கப்பட்டு, தேவை அதிகம் ஆகி உள்ளது. இதன் பின் இந்த புதிய முறையை கையில் எடுத்து உள்ளனர். இதன் மூலம் தினமும் 5-6 கிலோ லிட்டர் ஆக்சிஜன் தேவை குறைக்கப்பட்டது. அதன்பின் தொடர்ந்து ஆக்சிஜன் பயன்பாடு குறைந்து கொண்டே வருகிறது. உதாரணமாக 80 எஸ்பிஓ2 இருப்பவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு ஆக்சிஜனும், 70 இருப்பவர்களுக்கு அதைவிட கூடுதலாகவும் ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

சிறப்பு
முடிந்த அளவு நோயாளிகளுக்கு தேவையான ஆக்சினை சிக்கனமாக கொடுத்து, எல்லோருக்கும் ஆக்சிஜன் கிடைக்கும் வகையில் செய்து, பயன்பாட்டை குறைப்பதே ஆக்சிஜன் நர்ஸ்கள் மாடலின் நோக்கம். இதில் திருநெல்வேலி மாவட்டம் வெற்றியும் பெற்றுள்ளது. அதேபோல் ஆக்சிஜன் அதிகம் கொடுப்பது ஒரு வகையில் அடிக்சனை ஏற்படுத்தும் என்பதால் நோயாளிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக ஆக்சிஜன் சப்ளை உதவி இன்றி சுவாசிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இரவு
இதற்காக அம்மாவட்ட ஆட்சியர் இரவு முழுக்க கூட மருத்துவமனைகளில் நின்று திட்டங்களை தினசரி வகுத்து வருகிறார். ஆட்சியர் ஆகும் முன் சிகாகோவில் உள்ள மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமான ஆயான் சிகாகோ என்ற நிறுவனத்தில் ரிஸ்க் அனலிஸ்ட் பணியில் இருந்தார். தவறுகளை, சிக்கல்களை முன்பே கணித்து அதை ஆய்வு செய்வதுதான் இவரின் பணி. அந்த அனுபவத்தை தற்போது ஆட்சியாராக கொரோனா தடுப்பிலும் இவர் களமிறக்கி உள்ளார்.

கணிப்பு
தவறுகளை, சிக்கல்களை முன்பே இவர் கணித்ததன் மூலம் ஆக்சிஜன் பயன்பாட்டை சீர்படுத்தி உள்ளார். இதற்கு முன் தமிழ்நாடு திறன்மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநராக இருந்த வி.விஷ்ணு 2020ல் திருநெல்வேலி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக நியமிக்கப் பட்டார். இதற்கு முன், சேரன்மகாதேவியில் துணையின் ஆட்சியராகவும், கன்னியாகுமரியில் இனயம் துறைமுகத்தை உருவாக்குவதற்கான சிறப்பு அலுவலராகவும் பணிபுரிந்தவர்.

கேரளா
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் மிகவும் வறுமையான பின்னணியை கொண்டவர். தனது படிப்பு மூலம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிய இவர் திருச்சி என்ஐடியல் எஞ்சினியரிங் படித்துவிட்டு, பின் சிகாகோவில் பணியாற்றிவிட்டு பின் 2011ல் குடிமைப்பணி தேர்வை எதிர்கொண்டு, ஐஏஎஸ் ஆனார். இவரின் மாடல் காரணமாக தமிழகத்திலேயே நெல்லையில்தான் குறைவான ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications