மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
நெல்லை: திருநெல்வேலி மாவட்டம் விகே புரத்தில் வாக்காளர்களை ஒருமையில் பேசிய தேர்தல் மைய அதிகாரியை குண்டுகட்டாக போலீசார் வெளியேற்றியதால் அங்குப் பதற்றம் ஏற்பட்டது.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து 102 லோக்சபா தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெற்றது. இதற்காகக் காலை வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆர்வமாக வாக்களிக்கக் குவிந்தனர். அப்போது நெல்லையில் வாக்குச்சாவடியில் திடீரென போலீசார் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வாக்குப்பதிவு: லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அடுத்துள்ள விகே புரத்தில் புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு வாக்குச் சாவடி அதிகாரியாக ஜெஸ்டின் கோவில் பிள்ளை என்பவர் இருந்தார். இன்று காலை முதலே அவர் வாக்களிக்க வரும் பொதுமக்களை வாக்காளர்களை ஒருமையில் பேசியுள்ளார்.
வாக்களிக்க வரும் அனைவரையும் இவர் இப்படிப் பேசியதால் பலர் இது தொடர்பாகப் புகார் அளித்தனர். வாக்குச்சாவடி அதிகாரியை எதிர்த்து வாக்காளர்கள் அங்குத் திரண்டனர். இதையடுத்து தொடர்ந்து அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் சதீஷ்குமார் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரியான நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குண்டுக்கட்டாக வெளியேற்றம்: இதையடுத்து வாக்காளர்களுடன் ஒருமையில் பேசிய வாக்குச்சாவடி அதிகாரி ஜெபஸ்டின் கோவில் பிள்ளையை மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இருப்பினும், ஜெபஸ்டின் மாவட்ட ஆட்சியர் உத்தரவை ஏற்க முடியாது என்று கூறி பிரச்சினை செய்துள்ளார். இதையடுத்து அவரை வட்டாட்சியர் உதவியுடன் காவல் துறையினர் வாக்கு மையத்திலிருந்து குண்டு கட்டாக வெளியேற்றினர். ஒரே நேரத்தில் அதிகப்படியான போலீசார் வாக்குச்சாவடியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெபஸ்டின் வெளியேற்றப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாகத் தேர்தல் மைய அதிகாரியாக கனகராஜ் என்பவர் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு வாக்குப் பதிவு அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது. திருநெல்வேலி தொகுதியில் 2019இல் 67.22% பதிவான நிலையில், இந்த முறை மாலை 7 மணி வரை 70.46% பேர் வாக்களித்துள்ளனர்.
நெல்லை தொகுதி: நெல்லை தொகுதியில் இந்த முறை கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ராபர்ட் புரூஸ் போட்டியிடும் நிலையில், அதிமுக சார்பில் ஜான்சி ராணி போட்டியிடுகிறார். பாஜகவில் இருந்து எம்எல்ஏ நைனார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியில் இருந்து சத்யா களத்தில் உள்ளனர். கடந்த 2019 தேர்தலில் இங்கு திமுக சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 5.22 லட்சம் வாக்குகளைப் பெற்று, அதிமுகவின் மனோஜ் பாண்டியனை 1.85 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார்.












Click it and Unblock the Notifications