நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
திருநெல்வேலி: திருநெல்வேலிக்கு வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருநெல்லி மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று வருகை தந்தார். இன்று பிற்பகல் முதலே பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஸ்டாலின் இரவு 8.45 மணியளவில் பொருநை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். இன்று காலை 11 மணி அளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தூத்துக்குடிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து கார் மூலம் நெல்லை வந்தார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து திருநெல்வேலி மாநகரத்தின் வண்ணார்பேட்டையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு மதிய உணவுக்கு பின்னர் நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் மாலை 4 மணியளவில் வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு நடைபெற்றம் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்றார்.
பின்னர் திருநெல்வேலி ரெட்டியார்பட்டி மலை 4 வழிச்சாலை அருகே அமைக்கப்பட்டுள்ள, அகழாய்வு பொருட்களை காட்சிப்படுத்தவும், தமிழர்களின் நாகரிகத்தை பறைசாற்றும் வகையிலும் ரூ.62 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதன் பின்னர் மின்னொளியில் ஜொலிக்கும் அருங்காட்சியகத்தை ஒவ்வொரு கட்டிடமாக சென்று முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டு வருகிறார். தொடர்ந்து மீண்டும் அரசு சுற்றுலா மாளிகைக்கு சென்று ஓய்வெடுக்க உள்ளார். பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் வண்ணார்பேட்டையில் இருந்து புறப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விழா மேடைக்கு செல்கிறார்.
அங்கு அரசு சார்பில் நடைபெறும் விழாவில் மொத்தம் ரூ.639 கோடியில், காயிதே மில்லத் நினைவு நூலகம் உள்ளிட்ட புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், அரசு ஆஸ்பத்திரி கூடுதல் கட்டிடம் உள்பட முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். அந்த விழாவில் 45 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். 50 புதிய பஸ் போக்குவரத்து சேவையையும் திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதிக்கு தொடங்கி வைக்கிறார். பின்னர் அங்கிருந்து தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சென்று, விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
ஞாயிறு அன்று நடைபெறும் அரசு விழாவுக்காக சுமார் 30 ஆயிரம் பேர் அமரும் வகையிலான பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருக்கிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரில் வண்ணார்பேட்டை முதல் டக்கரம்மாள்புரம் வரையிலும் சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையின் இருபுறமும் கம்பங்கள் நடப்பட்டு தி.மு.க. கட்சிக்கொடிகள் பறக்கின்றன. வழிநெடுகிலும் நிர்வாகிகள் வரவேற்பு பேனர்கள் வைத்துள்ளனர். முதல்வர் வருகை காரணமாக சாலைகள் சீரமைக்கப்பட்டு பளிச்சென்று மாறி உள்ளன.












Click it and Unblock the Notifications