தீபாவளி கொண்டாட ஆசை ஆசையாய் தாய் வீட்டுக்கு வந்த கர்ப்பிணி.. வெள்ளத்தில் மூழ்கி சடலமாக மீட்பு
களக்காடு: நெல்லை மாவட்டம் களக்காடு அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட கர்ப்பிணி சடலமாக மீட்கப்பட்டார்.
Recommended Video
தமிழகத்திற்கு மழை பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை கடந்த மாத இறுதியில் தொடங்கியது. இதன் எதிரொலியாக நெல்லை மாவட்டத்தில் களக்காடு பகுதியில் கடந்த 3ஆம் தேதி கனமழை கொட்டியது.
இதனால் களக்காட்டில் ஓடும் கால்வாய் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் நீர் நிலைகள் ஆர்ப்பரித்து ஓடுகின்றன. சிதம்பரபுரம் பகுதியில் உள்ள குளங்கள் நிரம்பியதை அடுத்து அங்குள்ள கால்வாய்களில் வந்த உபரி நீர் நாங்குநேரியான் கால்வாயில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

தரைப்பாலம்
இதையடுத்து சிதம்பரபுரம் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் களக்காடு- சிதம்பரபுரம் செல்வதற்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் களக்காடு பகுதி, கருவேலங்குளம், கருத்தான் தெரு உள்ளிட்ட கிராமங்களிலும் தண்ணீர் சூழ்ந்தது.

குமரி மாவட்டம்
இதனிடையே களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் ராஜபுதூர் தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் தனது லேகா (23). இவரை குமரி மாவட்டம் நாகர்கோவில் சூரங்குடியை சேர்ந்த பரமேஸ்வரனுக்கு திருமணம் செய்து கொடுத்தார். லேகா கர்ப்பமாக இருந்தார். தீபாவளி பண்டிகையை தனது வீட்டில் கொண்டாடுவதற்காக லேகாவையும் மருமகன் பரமேஸ்வரனையும் முருகன் களக்காடுக்கு ஆட்டோவில் அழைத்து வந்தார்.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது
அப்போது சிதம்பரபுரம் செல்லும் வழியில் உல்ள தரைபாலத்தின் மீது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் ஆட்டோ இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து ஆட்டோவை திருப்பி அனுப்பிவிட்டு முருகன், லேகா, பரமேஸ்வரன், லேகாவின் சகோதரர் பாரத் ஆகியோர் தண்ணீருக்குள் இறங்கி நடந்து பாலத்தை கடக்க முயன்றனர்.

4 பேர் அடித்து செல்லப்பட்ட சம்பவம்
அப்போது எதிர்பாராதவிதமாக காட்டாற்று வெள்ளம் வந்ததால் அந்த வெள்ளத்தில் 4 பேரும் அடித்து செல்லப்பட்டனர். இதில் முருகன், பாரத், பரமேஸ்வரன் ஆகியோர் நீந்தி கரை சேர்ந்தனர். ஆனால் லேகா வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து தகவலறிந்த சிதம்பரபுரம் இளைஞர்கள், நாங்குநேரி தீயணைப்பு துறையினருடன் லேகாவை தேடி வந்தனர்.

மரத்தில் கிடந்த கர்ப்பிணியின் உடல்
பொதுப் பணித் துறையினர் கோவில்பத்தில் உள்ள ஆண்டிச்சி மதகை திறந்து வெள்ளத்தை உப்பாற்றில் திருப்பினர். இதையடுத்து நாங்குநேரியான் கால்வாயின் தண்ணீர் குறைந்தது. அப்போது அந்த கால்வாயின் ஒரு மரத்தில் சிக்கியிருந்த லேகாவின் உடல் மீட்கப்பட்டது. தீபாவளி பண்டிகைக்காக ஆசை ஆசையாய் மகளையும் மருமகனையும் அழைத்து வந்த நிலையில் இப்படி மகளை அநியாயமாக பறி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications