நெல்லையில் பதுங்கிய ஆற்காடு சுரேஷ் கூட்டாளி வைரமணியை தூக்கிய போலீஸ்.. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு?
நெல்லை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ஆற்காடு சுரேஷின் கூட்டாளி வைரமணி என்பவரை நெல்லையில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். சொந்த ஊரில் பதுங்கி இருந்த ரவுடி வைரமணியிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 5 ஆம் தேதி பெரம்பூர் செம்பியம் பகுதியில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக பொன்னை பாலு, அருள், உள்ளிட்ட 16 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பொன்னை பாலு உள்ளிட்ட 11 பேரை 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் செய்யப்பட்டார். அதன்பிறகு 10 பேர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீசார் பாஜகவை சேர்ந்த அஞ்சலை, அதிமுகவை சேர்ந்த மலர்க்கொடி, தமாகாவைச் சேர்ந்த ஹரிஹரன், திமுக நிர்வாகியின் மகனான சதீஷ், அதிமுகவைச் சேர்ந்த ஹரிதரன் ஆகியோரை கைது செய்தனர்.
கைதான ஹரிதரன் கொடுத்த தகவலின் அடிப்படையில் வெங்கத்தூர் கூவம் ஆற்றில் வீசப்பட்ட 5 செல்போன்களை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு ரவுடி குழுக்கள் ஒன்றிணைந்து ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைது செய்ப்பட்டவர்களிடம் இருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடி சம்போ செந்தில், சீசிங் ராஜா உள்ளிட்ட ரவுடிகளை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களை ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவருக்கும் நெல்லையைச் சேர்ந்த ஒரு ரவுடிக்கும் ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். தலைமறைவான ரவுடியை பிடிக்க தனிப்படை போலீசார் தென் மாவட்டங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் இருந்த வைரமணி, ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்குப் பின்பு சொந்த ஊரான வீரவநல்லூர் சென்று பதுங்கி இருந்ததாக தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் அளித்த தகவலின் படி, வீரவநல்லூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், திருநெல்வேலியில் வைத்து வைரமணியை வீரவநல்லூர் எஸ்.ஐ இசக்கிராஜா தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட வைரமணி, ஆற்காடு சுரேஷின் கூட்டாளி ஆவார். இவருக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? எதற்காக சொந்த ஊர் சென்று பதுங்கி இருந்தார்? என்பது குறித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், ஆற்காடு சுரேஷ் உடன் முன்பு இணைந்து செயல்பட்டதால் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என பயந்து சொந்த ஊருக்கு வந்ததாக வைரமணி போலீசாரிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய மூன்று பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்த 4 பேரையும் பரங்கிமலை பகுதியில் உள்ள ஆயுதப்படை அலுவலகத்தில் வைத்து செம்பியம் போலீசார் தனித் தனியாக விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications