கோவை டூ திருநெல்வேலி வந்த சந்தோஷ்.. கடைசியாக சந்தோஷமாக சந்தித்த நண்பர்கள்.. யாருமே உயிருடன் இல்லை
திருநெல்வேலி: திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று முன்தினம் இரவில் அரசு பஸ் ஒன்று புறப்பட்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது. அப்போது டவுன் பகுதியில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்துள்ளனர். அந்த 3 பேருக்கு நடந்த சம்பவம் அந்த பகுதி மக்களை ஆடிப்போக வைத்துள்ளது. அவர்களை பற்றி உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதிகாலை நேரத்தில் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை அதிகம் பார்த்திருப்பீர்கள். நீண்ட நாள் கழித்து வந்த நண்பனுடன் அதிகாலை வேளையில் ஊர் சுற்றுவார்கள். டீ குடிப்பதற்காக இரவு நேரங்களில் நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் செல்வார்கள். ஆனால் அதுவே அவர்களின் இறுதிப்பயணமாக சில நேரங்களில் நடக்கிறது.

உற்சாக மிகுதி
நாம் நன்றாக வந்தாலும் எதிரே வரும் வாகனங்கள் இரவு நேரங்களில் சரியாக வருவது இல்லை.. அதுவே அவர்களுக்கு எமனாக மாறக்காரணமாக விடுகிறது. அதேநேரம் இருசக்கர வாகன ஓட்டிகளும் உற்சாக மிகுதியில் ஒரு சில வினாடிகள் கவனக்குறைவாக வாகனத்தை ஓட்டுகிறார்கள். அதுவும் சில நேரங்களில் கற்பனை செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. நண்பர்கள் மூன்று பேருக்கு திருநெல்வேலியில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
திருநெல்வேலி பஸ் நிலையம்
திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று முன்தினம் இரவில் அரசுபேருந்து ஒன்று சென்று கொண்டிந்தது. அந்த பேருந்து திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு ஈரடுக்கு மேம்பாலத்தில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது டவுன் பகுதியில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு நோக்கி ஒரே இருசக்கர வாகனத்தில் 3 இளைஞர்கள் வந்தனர். ஈரடுக்கு மேம்பாலத்தில் வந்த போது இருசக்கர வாகனமும், அரசு பேருந்தும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
நண்பர்கள் உயிருடன் இல்லை
கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கோவையில் இருந்து வந்த நண்பன்
அதில் உயிரிழந்த வாலிபர்கள் திருநெல்வேலி டவுன் வையாபுரி நகரை சேர்ந்த லோகேஷ் (வயது 23), முகமது அலி தெருவை சேர்ந்த சாதிக் (23), சந்தோஷ் (22) என்பது தெரியவந்தது. உயிரிழந்த 3 பேர் பற்றிய உருக்கமான தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, விபத்தில் இறந்த லோகேஷ் ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்திலும், சாதிக் ஒரு ஓட்டலிலும் வேலைபார்த்து வந்துள்ளார்கள். சந்தோஷ் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார். கோவையில் பணியாற்றும் சந்தோஷ் நேற்று முன்தினம் காலையில் ஊருக்கு வந்தார். நீண்டநாள் கழித்து விடுமுறைக்கு நண்பன் வந்துள்ளதால் 3 பேரும் ஒருவரை ஒருவர் சந்தித்து தங்களது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நண்பர்கள் உருக்கமான சந்திப்பு
அப்படியே அதே மகிழ்ச்சியுடன் இரவில் பாளையங்கோட்டைக்கு உள்ள தள்ளுவண்டி கடையில் பானிபூரி சாப்பிடுவதற்காக 3 பேரும் ஒரே இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது தான் இந்த விபத்து நடந்துவிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நண்பர்களின் மகிழ்ச்சியான சந்திப்பு இப்படி ஆனதை எண்ணி உறவினர்கள் சோகத்தில் இருக்கிறார்கள். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும். அதேபோல் ஒரே வாகனத்தில் 3 பேர் செல்லவே கூடாது. எதிர்பாரதவிதமாக வாகங்கள் வந்தால், 3 பேர் செல்லும் போது, கட்டுப்பாட்டிற்கு வாகனம் வராது. அதேபோல் தலைகவசம் அணிந்தால், தூக்கி வீசப்படும் போது, தலையில் அடிபடாமல் தப்பிக்க முடியும். எனவே கண்டிப்பாக தலைகவசம் அணிய வேண்டும். அதேபோல் போக்குவரத்து விதிகளை மதித்து கவனமாக செல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications