தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் காலமானார்- வேல்முருகன், கமல் இரங்கல்
திருநெல்வேலி: தமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) உடல்நலக் குறைவால் காலமானார்.
தமிழகத்தின் பண்பாட்டு ஆய்வுகளின் முன்னோடியாக திகழ்ந்தவர் தொ.ப. எனும் பேராசிரியர் தொ. பரமசிவன். பண்பாடு, சமயங்கள் தொடர்பான ஆய்வுகளை விரிவாக மேற்கொண்டவர்.
திராவிட சிந்தனைகளுடன் கூடிய ஆய்வு முறையை கையாண்டவர் தொ. பரமசிவன். தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஆவணப்படுத்தியவர் பேராசிரியர் தொ.பரமசிவன்.
மதுரை அழகர் கோவில் தொடர்பான தொ.பரமசிவத்தின் ஆய்வு நூல் இன்றளவும் கோவில் ஆய்வு நூல்களில் கொண்டாடப்படக் கூடிய ஆகச் சிறந்த நூலாகும். மதுரை தியாகராசா கல்லூரி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பேராசிரியராக பணிபுரிந்தவர் தொ. பரமசிவன்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை தலைவராகவும் பணியாற்றினார். அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம், சமயங்களின் அரசியல், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் என ஏராளமான நூல்களை எழுதியுள்ளார் தொ. பரமசிவன்.
உடல்நலக் குறைவால் பாளையங்கோட்டையில் இன்று இரவு தொ. பரமசிவன் காலமானார். அவரது மறைவு தமிழ்ச் சமூகத்துக்கும் ஆய்வு உலகத்துக்கும் மிகப் பெரிய பேரிழப்பாக்கும்.
வேல்முருகன் இரங்கல்
தமிழறிஞர் தொ.பரமசிவம் மறைவுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள இரங்கல்:
தமிழ் நாட்டார் வழக்கியலின் ஆகப் பெரும் பொக்கிஷம், தமிழின் தொன்ம வரலாற்றினை தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்திட உடல் நலிவுற்ற தன் இறுதி காலத்திலும் அயராது உழைத்திட்ட அய்யா திரு.தொ.பரமசிவன். அவர்கள் சிறிது நேரத்திற்கு முன்பாக இயற்கை எய்தினார் என்கிற செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அய்யா அவர்கள் தமிழர் வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார். இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.
தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2020
இது ட்வீட்டில் அடங்காத் துயரம். pic.twitter.com/mvc5rY9EeW
கமல்ஹாசன் இரங்கல்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல்:
தொ.பரமசிவன் மறைந்தார். வருந்துகிறேன். இன்னொரு தொ.பரமசிவன் உருவாக வேண்டும் என்று ஆவலாக காத்திருக்கிறேன். இது ட்வீட்டில் அடங்காத் துயரம். இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.