ரூம் போட்டு யோசிப்பாங்களோ? வீடு, கடைகளை மறித்து கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்! நெல்லையில் அவலம்
திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனில் குற்றாலம் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் கழிவுநீரோடையின் சுற்றுசுவர் ஒன்றரை அடி முதல் 3 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் செல்ல முடியாத வகையில் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பான போட்டோ, வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பிய நிலையில் திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி டவுன் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியாகும். திருநெல்வேலி டவுன்- குற்றாலம் நெடுஞ்சாலை என்பது மிகவும் குறுகலாக காணப்படுகிறது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றனர். இதனால் இந்த சாலை எப்போதும் பிஸியாகவே இருக்கும்.
இந்நிலையில் தான் பல்வேறு திட்ட பணிகளுக்காக அவ்வப்போது சாலைகள் தோண்டப்படுவதும், போக்குவரத்து மாற்று பாதையில் இயக்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சில கிலோமீட்டர் தொலைவு சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

கழிவுநீர் கால்வாய் பணி
இதற்கிடையே தான் திருநெல்வேலியில் மாநகர பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் அமைத்தல் மற்றும் கூட்டு குடிநீர் திட்ட பணிகளும் தொடங்கி நடைபெற்றன. இதனால் சாலையோரம் பள்ளங்கள் தோண்டப்பட்டு இருந்தன. இந்நிலையில் தான் திருநெல்வேலி டவுன்-குற்றால ரோடு பகுதிகளில் 2.20 கிலோமீட்டர் தூரத்துக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பில் கழிவு கால்வாய் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

3 அடி உயரம் வரை சுவர்
இந்த கழிவுநீர் கால்வாய்க்கு தரைப்பகுதியில் இருந்து ஒன்றரை அடி முதல் 3 அடி உயரம் வரை சுவர் கட்டப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் கடைகளுக்கு சென்று வருவோர் கழிவுநீர் கால்வாய் மீது ஏறி செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இளம்வயதினருக்கு இது எளிமையாக இருந்தாலும் கூட முதியவர்கள், சிறுவர்கள் வீடு, கடைகளுக்கு சதாரணமாக சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கதவுகளை திறக்க முடியாமல்..
குறிப்பாக சில வீடுகள் கழிவுநீர் கால்வாயையொட்டி வெளிப்புறமாக கதவுகளை திறக்கும் வகையில் அமைந்துள்ளன. தற்போதைய கால்வாய் கட்டுமான பணியால் இந்த வீடுகளில் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதாவது கதவுகளை வெளிப்புறமாக திறந்தால் கால்வாயின் சுவர் தடுக்கிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் சிரமத்தை சந்தித்தனர்.

மக்கள் விரக்தி
இதுபற்றி அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛கழிவுநீர் கால்வாய் மிகவும் உயரமாக வீடு, கடைகளில் வாசல்களை மறைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். கார், டூவீலர்களை வீட்டுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் பணி நடந்தது. ஒப்பந்ததாரரிடம் உயரம் குறைவாக அமைக்க கூறியும் அவர் கேட்கவில்லை. இதனை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்'' என்றனர்.

மறுசீரமைப்புக்கு உத்தரவு
இதுதொடர்பான வீடியோ மற்றும் போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகின. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் அதிகாரிகளை நெட்டிசன்கள் விமர்சனம் செய்ய தொடங்கினர். இந்நிலையில் தான் திருநெல்வேலி மாநகரில் பொதுமக்களுக்கு இடையூறாக அதிக உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாயை மறுசீரமைப்பு செய்ய கலெ க்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

ரூ.20 லட்சம் கட்டுமானம்
கலெக்டரின் இந்த உத்தரவை அதிகாரி ஒருவரும் உறுதி செய்தார். இதுபற்றி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‛‛கழிவுநீர் கால்வாய்களை உயரத்தை குறைத்து புனரமைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒப்பந்ததாரர் தவறு செய்துள்ளார். கட்டுமானத்திற்காக 20 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது. அதனை ஒப்பந்ததாரே ஏற்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications