பள்ளிகளுக்கு செல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு சென்று கல்வியைத் தொடர அழைப்பு விடுத்த நெல்லை ஆட்சியர்!
திருநெல்வேலி: பள்ளிகளுக்கு செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார், அந்த மாணவர்கள் கல்வியைத் தொடர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இது தொடர்பாக பள்ளிக்குச் செல்லாமல் இடை நின்ற மாணவர்களின் பெற்றோர்களுடன் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து தங்களது குழந்தைகளை தொடர்ந்து பள்ளிகளுக்கு அனுப்புவதாக பெற்றோர், மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக அண்மையில் மருத்துவர் இரா.சுகுமார் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து ராதாபுரம் வட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது ராதாபுரம் வட்டம், நக்கனேரி கிராமத்தில் கல்வியைத் தொடராமல் இடை நின்ற பள்ளி குழந்தைகள் இருப்பதை அறிந்த ஆட்சியர் மருத்துவர் இரா. சுகுமார், அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு நேரில் சென்றார். அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் கல்வி கற்காமல் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தியது தொடர்பான காரணங்களை கேட்டறிந்தார். அத்துடன், ஒரு குழந்தைக்கு கல்வியின் அவசியம் குறித்தும் மாணவர்களின் கல்விக்காக அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு உதவித் திட்டங்கள் குறித்தும் ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார், அந்த பெற்றோரிடம் விளக்கினார். இதனையடுத்து கல்வியை கைவிட்ட குழந்தைகளை மீண்டும் பள்ளிகளுக்கு அனுப்பி வைப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் உறுதி அளித்தனர்.
இராதாபுரம் வட்டம், நக்கனேரி கிராமத்தில் பள்ளி இடைநிற்றல் மாணவனின் இல்லத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.இரா.சுகுமார், இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று, பள்ளி இடைநிற்றல் குறித்து மாணவனிடம் கேட்டறிந்தார்.#Tirunelveli #TNGovt #TNDIPR @TNDIPRNEWS pic.twitter.com/HGdqxTCPIA
— District Collector, Tirunelveli (@Collectortnv) March 5, 2025
இதனைத் தொடர்ந்து ராதாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு மையங்களையும் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார். காவல் கிணறு பகுதியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் ஆட்சியர் மருத்துவர் இரா.சுகுமார் ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications