"என் பையனுக்கு இப்படியா முடிவெட்டுவ.." ஆபாச வார்த்தைகளால் திட்டி.. சலூன் கடையை பூட்டி காவலர் ரகளை
மகனுக்கு மோசமான முடி வெட்டியதாக போலீசார் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருநெல்வேலி: மகனுக்கு மோசமான முடி வெட்டியதாகக் கூறி காவலர் ஒருவர் சலூன் கடையைப் பூட்டி ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சம்மந்தப்பட்ட காவலர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஊரைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் போலீசாருக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. நேரம் காலம் பார்க்காமல் அவர்கள் உழைப்பதன் காரணமாகவே நாம் இங்கு நிம்மதியாக இருக்கிறோம்.
ஆனால், சில போலீஸ் அதிகாரிகள் தங்களிடம் இருக்கும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.. அதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் தான் நெல்லையில் நடந்துள்ளது.

திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணிபுரிந்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ.. இவருக்குத் திருமணமாகி மகனும் உள்ளார். இன்று காலை இவரது மகன் முடி வெட்ட அருகே உள்ள சலூன் கடைக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. முடியை வெட்டிக் கொண்டு அந்த சிறுவன் வீட்டிற்குச் சென்றுவிட்டார். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே காவலர் நேவிஸ் பிரிட்டோ மற்றும் அவரது மனைவி சலூன் கடைக்குச் சென்று பிரச்சினை செய்துள்ளனர்

முடி வெட்டவில்லை
தனது மகனுக்கு முடியைச் சரியாக வெட்டவில்லை என்று கூறி இருவரும் தகறாரில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், அப்போது சலூன் கடைக்காரர் அங்கு இல்லை. அவர் அருகே சாப்பிடச் சென்றதாகத் தெரிகிறது. இதையடுத்து சலூன் கடைக்காரருக்கு போன் போட்டு காவலர் நேவிஸ் பிரிட்டோ அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். இதனால் அக்கம் பக்கத்தினர் வரவே.. அங்குக் கூட்டம் கூடியுள்ளது.

தகாத வார்த்தைகளால் திட்டி
ஓனர் இல்லாத நிலையில், திட்டி தீர்த்த காவலர், பெரிய பூட்டை எடுத்து கடையைப் பூட்டும் போட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்கத்துக் கடைக்காரர்கள்.. "அவரும் வரட்டும்.. வந்தவுடன் என்ன நடந்தது என்று விசாரியுங்கள்.. அதன் பிறகு எதுவாக இருந்தாலும் செய்யுங்கள்.. ஓனர் இல்லாத நேரத்தில் இப்படிச் செய்வது சரியாக இருக்காது" என்று சொல்லியுள்ளனர். இருப்பினும், அதையெல்லாம் அந்த காவலர் கேட்கவே இல்லை.

கடையை பூட்டி ரகளை
பக்கத்துக் கடைக்காரர்களையும் திட்டிக் கொண்டே.. அவர் சலூன் கடையைப் பூட்டிவிட்டார். கொஞ்ச நேரத்தில் என்ன நடந்ததோ என்று பதறியடித்து கொண்டு சலூன் கடை உரிமையாளர் சிவராமன் அங்கு வந்துள்ளார். ஆனால், அதற்குள் போலீசார் அங்கிருந்து கிளம்பிவிட்டார். இருப்பினும் அவரது மனைவி அங்கேயே இருந்துள்ளார். சலூன் கடை உரிமையாளர் வந்தவுடன் மனைவி அவரிடம் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

போலீசில் புகார்
இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே அந்த சிறுவனிடம் கடைக்காரர், "நானா உனக்கு முடி வெட்டினேன்" என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் அனைவருக்கும் முன் இல்லை என்று கூறவே, நிலைமையே மாறியது.. அதன் பிறகே அங்குச் சற்று அமைதியான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து திசையன்விளை போலீஸ் ஸ்டேஷனில் சலூன் கடைக்காரர் புகார் கொடுத்தார்.

ரகளை
அந்த புகாரில் நேவிஸ் பிரிட்டோவால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் சலூன் கடைக்காரர் சிவரமான் தெரிவித்துள்ளார். மேலும், காவலர் தனக்கு போன் செய்து அவதூறாகப் பேசிய ஆடியோவையும் ஆதாரமாகச் சமர்ப்பித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை செய்த வள்ளியூர் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன். கடையைப் பூட்டி ரகளையில் ஈடுபட்ட காவலர் நேவிஸ் பிரிட்டோ இப்போது ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications