உஸ்.....ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை சொல்லிவிட்ட ஸ்டாலின்... அமைச்சர் உதயகுமார் 'பொளேர்'
Recommended Video
நாங்குநேரி: நாங்கள் ஆட்சிக்கு வருவோம் என 1,11,000 முறை திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார்.. இனியும் அவரால் ஆட்சியை பிடிக்க முடியாது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா மறைந்தது முதலே ஆட்சி மாற்றம் விரைவில் வரும் என திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கூறி வந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என தினகரன் உள்ளிட்டோர் தெரிவித்து வந்தனர்.

ஆனால் 2 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்ட நிலையில் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் மாற்றமும் ஏற்படவில்லை. இதை பல மேடைகளில் திமுக தலைவர் ஸ்டாலின் சுட்டிக் காட்டியிருப்பதுடன் நாங்கள் கொல்லைப்புற வழியாக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என விளக்கமும் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் அக்டோபர் 21-ல் நாங்குநேரி, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெறுகிறது. நாங்குநேரியில் நேற்று இரவு ஸ்டாலின் திண்ணை பிரசாரம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது பேசிய ஸ்டாலின், தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும்; அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்றார். இதற்கு இன்று பதிலளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், இதுவரை ஆட்சிக்கு வருவோம் என ஸ்டாலின் 1,11,000 முறை கூறிவிட்டார். இனியும் அவர் கூறிக் கொண்டே இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வரப்போவது இல்லை என விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications