படித்தது 3ஆம் வகுப்பு.. 3வது முறையாக கவுன்சிலர்.. நெல்லை மேயர் ஆகிறார் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்!
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை மறைமுக மேயர் தேர்தல் நடைபெற இருக்கிறது. நெல்லை மாநகராட்சியில் திமுகவே பெரும்பான்மை என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்தமுள்ள 55 கவுன்சிலர்களில் 51 பேர் திமுக கூட்டணி கவுன்சிலர்கள். திமுக பெரும்பான்மையாக உள்ள நிலையில், சரவணன் கடந்த முறை மேயராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற கவுன்சிலர்களின் வார்டுகளுக்கு பணிகளை முறையாக ஒதுக்கி தரவில்லை எனக் கூறி திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸும் அளித்தனர்.

நெல்லை மேயர் ராஜினாமா: எனினும், நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலையிட்டு, சமாதானம் செய்து வைத்தார். இதனால் மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கட்சி தலைமை உத்தரவுப்படி கடந்த மாதம் மேயர் சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த சரவணன் ஜூலை 3ஆம் தேதி அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இது தொடர்பாக மாநகராட்சி ஆணையரிடம் தனது ராஜினாமா கடிதத்தை சரவணன் கொடுத்த நிலையில் அந்த கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காக மேயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நெல்லை திமுக மேயர் வேட்பாளர் கிட்டு என்கிற ராமகிருஷ்ணன்: நெல்லை மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பதற்காக மறைமுக தேர்தல் நாளை ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. நெல்லையின் அடுத்த மேயர் வேட்பாளர் யார் என்பது குறித்து இன்று அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேஎன் நேரு, நெல்லை எம்.எல்.ஏ அப்துல் வகாப் உள்ளிட்டோர் முன்னிலையில் இன்று நெல்லையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
நெல்லை மேயர் பதவிக்கு திமுக சார்பில் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் போட்டி.. கூட்டாக அறிவித்த அமைச்சர்கள்!
இந்நிலையில், இன்று திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க மேயர் வேட்பாளராக கிட்டு என்ற ராமகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். நாளை காலை 10:30 மணிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி இருந்தால் தேர்தலை நடத்தி, பிற்பகலில் முடிவை அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுகவே பெரும்பான்மை என்பதால் கிட்டு என்ற ராமகிருஷ்ணன், நெல்லை மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த கிட்டு?: திருநெல்வேலி மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கிட்டு என்ற ராமகிருஷ்ணன் 3ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். இவர் 25வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளார். 3வது முறையாக கவுன்சிலராக இருந்து வருகிறார். அரசியலிலும், மாநகராட்சி பணிகளிலும் அனுபவம் மிக்கவர். கிட்டுவிற்கு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் கவுன்சிலர்கள் மத்தியில் ஆதரவு உள்ளது.












Click it and Unblock the Notifications