சாயந்திரத்துக்குள்ள பணம் வரணும்.. இல்லாட்டி.. மிரட்டிய கும்பல்.. மண்ணெண்ணை கேனை தூக்கிய இரு பெண்கள்!
கந்து வட்டி கொடுமையால் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்றனர்
Recommended Video
நெல்லை: "நாங்க யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கல.. ஆனா சாயங்காலத்துக்குள்ளே பணம் வந்தாகணும், இல்லேன்னா கேஸ் போட்டு உன்னை உள்ளே தள்ளிவிடுவோம்" என்று கந்துவட்டிக்காரர்கள் தங்களை மிரட்டியதாக கூறி 2 பெண்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கந்துவட்டி பிரச்சனையை பெரிய அளவில் தடுத்து நிறுத்த முடியவில்லை..2 வருஷத்துக்கு முன்ப இசக்கிமுத்து என்பவர் தன் மனைவி, 2 பெண் குழந்தைகளுடன் இதே நெல்லை கலெக்டர் ஆபீசில் தற்கொலை செய்து கொண்டார்.. இந்த சம்பவம் தமிழகத்தை நிலைகுலைய வைத்தது.. இதற்கு பிறகும் நிறைய தீக்குளிப்பு சம்பவங்கள் கலெக்டர் அலுவலகத்தில் நடக்க ஆரம்பத்தது.

இதையடுத்து, யார் மனு தந்தாலும் அதன் பேரில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், யாரும் இனி தற்கொலைக்க முயல வேண்டாம் என்று கலெக்டரே அன்றைய தினம் அறிவித்திருந்தார். அதற்காகத்தான் 9 வாயில்களில் 7 வாயில்கள் அடைக்கப்பட்டுள்ளன.. ஏகப்பட்ட போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த அவலம் இன்றுவரை நீடித்து வருகிறது.. களக்காடு சிதம்பராபுரத்தை சேர்ந்த 2 பெண்கள் கந்து வட்டி பிரச்சனையில் சிக்கி உள்ளதாக கலெக்டர் ஆபீசிசில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ குளிக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. களக்காடு சிதம்பராபுரத்தைச் சேர்ந்த சகோதரர்கள் முருகன் - புகழ்சேட். 2 பேரும் அதே பகுதியில் சோடா கம்பெனி ஒன்றை நடத்தி உள்ளனர். இந்த தொழிலை பெருக்க அதே பகுதியைச் சேர்ந்த வசந்தா, ஜானகி ஆகியோரிடம் 2 லட்சத்து 20 ஆயிரம் கடன் வாங்கியுள்ளனர்.
ஆனால் அவர்களால் சோடா கம்பெனியை நடத்த முடியவில்லை.. தொழிலும் நஷ்டமாகிவிட்டது.. அதனால் கூலி வேலைக்கு சென்றுவிட்டனர்... வாங்கிய கடனிற்காக இதுவரை வார வட்டியாக 7 லட்சம் ரூபாய் கட்டியுள்ளனர். ஆனால் அதற்கு மேல் வட்டி கட்ட அவர்களிடம் பணம் இல்லை.. ஆனாலும் வட்டி கேட்டு தொந்தரவு செய்வதால், களக்காடு ஸ்டேஷனில் புகார் அளித்தள்ளனர்.. அதன்பேரில் நடவடிக்கை இல்லை என்பதால், போன வாரம் கலெக்டர் ஆபீசில் வந்து புகார் தந்தனர்.. இதன்பேரிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இதனிடையே கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து மிரட்டி வந்ததைத் தொடர்ந்து முருகன் மனைவி கிருஷ்ணவேணியும், புகழ்சேட் மனைவி பாமாவும் இன்று கலெக்டர் ஆபீசுக்கு வந்தனர்.. மனுநீதிநாள் முகாமான இன்று, அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி கலெக்டர் ஆபீசின் போர்டிகோவுக்கு வந்தனர்.. இருவரும் திடீரென கையில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீ குளிக்க முயற்சித்தனர் . ஆனால் அதற்குள் அவர்களை போலீசார் மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதை பற்றி பாதிக்கப்பட்ட பெண் கிருஷ்ணவேணி சொல்லும்போது, "செயின், கம்மலை அடகு வெச்சிதான் வட்டி கட்டிட்டு வந்தோம்.. இப்போ கூட டைம் தாங்க, கண்டிப்பா திருப்பி தருவோம்னு தான் சொல்றோம்.. நாங்க யாரையும் ஏமாத்தணும்னு நினைக்கல.. ஆனா போலீசார் துணையுடன் கொலை மிரட்டல் தர்றாங்க.. அதுக்கு பயந்துதான் தற்கொலை முடிவுக்கு வந்துட்டோம்" என்றார் கண்ணீருடன்!
உடனடியாக விஷயத்தை கேள்விப்பட்டு கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், அவர்களை அழைத்து விசாரணை நடத்தினார். கந்துவட்டி பிரச்னையிலிருந்து அவர்களுக்குத் தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.. இதன்பின்னரே 2 பெண்களும் நிம்மதியாக கிளம்பி சென்றனர்.












Click it and Unblock the Notifications