திருவள்ளூர் அருகே திடீர் பதற்றம்-தண்டவாளத்தில் விரிசல்- பொன்னேரியில் காத்திருந்த எக்ஸ்பிரஸ் ரயில்கள்
சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் திடீரென தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் 1 மணிநேரம் ரயில் சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் அடுத்தடுத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் தவிப்புக்குள்ளாக அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
சென்னை அருகே கவரைப்பேட்டையில் அண்மையில் பயங்கர ரயில் விபத்து நிகழ்ந்தது. சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் 19 பேர் படுகாயமடைந்தனர்; 1,000-க்கும் மேற்பட்டோர் காயங்களின்றி உயிர் தப்பினர்.

கவரைப்பேட்டை ரயில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் விபத்து திட்டமிட்ட நாசவேலையாகவே சந்தேகிக்கப்பட்டு தேசிய புலனாய்வு ஏஜென்சியும் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கும்மிடிப்பூண்டி- சென்னை மார்க்கத்தில் அனைத்து ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டன.
சென்னை நோக்கி வந்த 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் பொன்னேரி ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இந்த ரயில்களில் பயணித்த ஆயிரக்கணக்கான பயணிகள் நிலைமை என்னவென்று புரியாமல் தத்தளித்தனர். இதனால் அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து 1 மணிநேரத்தில் ரயில்வே தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்டு பின்னர் அனைத்து ரயில் சேவைகளும் வழக்கம் போல இயக்கப்பட்டன. ரயில்வே தண்டவாள விரிசல் தொடர்பாக ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications