கும்மிடிப்பூண்டி சிறுமியின் பெற்றோரை மிரட்டினாரா தவெக எம்எல்ஏ விஜயகுமார்? மாதர் சங்கத்தினர் புகார்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட குழந்தையின் பெற்றோரை தவெக எம்எல்ஏ விஜயகுமார் மிரட்டியதாக மாதர் சங்கத்தினர் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிப்காட் பகுதி உள்ளது. அங்கு கடந்த 14 ஆம் தேதி மாலை ஒரு வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது. இதையடுத்து அந்த குழந்தையை அப்பகுதி முழுக்க தேடி பார்த்த போது அக்குழந்தை முட்புதரில் காயங்களுடன் இருந்தது.

உடனே குழந்தையை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். குழந்தைக்கு முதலுதவி அளித்த நிலையில் குழந்தையை மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி 15 ஆம் தேதி குழந்தை இறந்தது.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் அந்தக் குழந்தையை பிஸ்கெட் வாங்கி தந்து அழைத்து சென்று வடமாநில தொழிலாளர்கள் 4 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இந்த சம்பவம் கூட்டு பலாத்காரம் இல்லை என மறுத்த காவல் துறை, அந்த குழந்தையை இறந்த வழக்கில் ஒருவன்தான் குற்றவாளி என தெரிவித்தது.
இதையடுத்து பீகாரை சேர்ந்த பிபின் மஞ்சி (19) என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் வேளையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாகப் ஜனநாயக மாதர் சங்கத்தினர் களத்தில் இறங்கினர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் குழந்தையின் உடல் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், அங்கு குழந்தையின் பெற்றோரை சந்திக்க மாதர் சங்கத்தினர், மகளிர் அமைப்புகள், திமுக மகளிரணியினர் வந்தனர். ஆனால் பெற்றோரை சந்திக்க போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இந்த நிலையில் தவெக கட்சியின் உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) விஜயகுமார், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார்.
அந்த பிணவறையில் இருந்து பெற்றோரை சந்திக்க யாருக்கும் அனுமதி அளிக்கப்படாத நிலையில் எம்எல்ஏவுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை கண்டித்து போலீஸாருடன் மாதர் சங்கத்தினர் வாக்குவாதம் செய்தனர். இந்த நிலையில் அந்த பெற்றோரை எம்எல்ஏ விஜயகுமார் மிரட்டியதாகவும் ஏதோ ஒரு படிவத்தில் கையெழுத்து பெற்றதாகவும் மாதர் சங்கத்தினர் புகார் கூறுகிறார்கள்.
இதையடுத்து அந்த இடத்தில் இருந்து எம்எல்ஏ சென்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஒரு எம்எல்ஏ, பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோரை தனியே சந்திக்க எப்படி அனுமதிக்கலாம் என மாதர் சங்கத்தினர் கேள்வி எழுப்பினர்.
இந்த விவகாரத்தில் தவெக தரப்பில் இருந்தோ அல்லது எம்.எல்.ஏ விஜயகுமார் தரப்பில் இருந்தோ இன்னும் முறையான விளக்கங்கள் அளிக்கப்படவில்லை. எது எப்படியாயினும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எவ்வித அழுத்தமும் இன்றி, சுதந்திரமான முறையில் சட்டம் தன் கடமையைச் செய்து உரிய நீதியை வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications