இதென்ன உத்தர பிரதேச மாடலா? கும்மிடிப்பூண்டி சிறுமி பலாத்காரம்.. ரகசியமாக உடல் அடக்கம்! கொடுமை

Subscribe to Oneindia Tamil

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நிகழ்ந்துள்ள மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் படுகொலை சம்பவம் தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கியுள்ளது. இந்தக் கொடூர சம்பவத்தின் பின்னணியில், பெண் குழந்தையின் உடலை உள்ளூர் மயானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யாமல், காவல்துறை நள்ளிரவில் இரகசியமாக பொன்னேரி மயானத்துக்கு கொண்டு சென்று அடக்கம் செய்த செயல் பெரும் பரபரப்பையும், கோப ஆவேசத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நடவடிக்கை உத்தரப் பிரதேச ஹத்ராஸ் சம்பவத்தை அப்படியே நினைவூட்டுவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Tiruvallur

கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியில் இரும்பு தொழிற்சாலையில் பணியாற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த தம்பதியினரின் மகள், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்கு அருகிலேயே கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டாள். சிறுமியின் உடல் மீட்கப்பட்ட பிறகு, பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. திங்கள் மாலை பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் கும்மிடிப்பூண்டிக்கு கொண்டு வரப்பட்டபோது, அங்கு ஏற்கனவே பெரும் திரளான பொதுமக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் வட மாநில தொழிலாளர்கள் திரண்டிருந்தனர்.

உள்ளூர் மயானத்தில் இறுதி அஞ்சலி செலுத்தி உடலை அடக்கம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என காவல்துறை அஞ்சியது. இதனைத் தொடர்ந்து, கூட்டத்தை திசைதிருப்பிய காவல்துறையினர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சிறுமியின் உடலை நள்ளிரவு நேரத்தில் கும்மிடிப்பூண்டியில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொன்னேரி மயானத்துக்கு அவசர அவசரமாக கொண்டு சென்றனர்.

அங்கு பெற்றோரின் சம்மதத்துடன் என்று கூறப்பட்டாலும், பலத்த சந்தேகங்களுக்கு இடையே உடல் இரகசியமாக அடக்கம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் மக்களுக்கு மறுநாள் காலையில்தான் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்களும், வட மாநில தொழிலாளர்களும் மீண்டும் கும்மிடிப்பூண்டி புதுப்பேட்டை பகுதியில் ஜி.என்.டி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். "கொடூரமாக கொல்லப்பட்ட எங்கள் குழந்தைக்கு இறுதி மரியாதை செய்யக் கூட உரிமை இல்லையா? உள்ளூர் மயானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அடக்கம் செய்யாமல், இரவோடு இரவாக திருட்டுத்தனமாக பொன்னேரிக்கு கொண்டு சென்றது ஏன்?" என போராட்டக்காரர்கள் ஆவேசமாக கேள்வி எழுப்பினர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இந்த நள்ளிரவு அடக்க நடவடிக்கை, 2020-ம் ஆண்டு உத்தரப் பிரதேசம் ஹத்ராஸில் நடந்த பாலியல் வன்கொடுமை படுகொலை வழக்கை நினைவூட்டுகிறது. அப்போது பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை குடும்பத்தாருக்கு தெரியாமல், வீட்டைப் பூட்டி வைத்துவிட்டு நள்ளிரவு 2.30 மணிக்கு காவல்துறை தகனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்ற அவசர இரகசிய அடக்க உத்தியை தமிழக காவல்துறையும் கையாண்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

குழந்தை பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை போன்ற கொடூர குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்க வேண்டிய காவல்துறை, இறுதிச் சடங்கை ஏன் இவ்வளவு இரகசியமாக நடத்த வேண்டும் என்பது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மற்றும் காவல்துறையின் நடவடிக்கை மீதான நம்பிக்கையை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். குற்றவாளிகளை விரைவாக கைது செய்து கடும் தண்டனை வழங்குவதோடு, இந்த இரகசிய அடக்க நடவடிக்கைக்கு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை சிறுமிகளின் பாதுகாப்பு, குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் மற்றும் காவல்துறையின் வெளிப்படைத்தன்மை ஆகியவை குறித்து தீவிர விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+