ஆர்.எஸ்.எஸ். வளர வளர நாடு ஆபத்தை நோக்கிச் செல்கிறது! கவலை தெரிவிக்கும் திருமாவளவன்!
திருவள்ளூர்: பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வளர வளர நாடு ஆபத்தை நோக்கிச் செல்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியின் இல்ல மணவிழாவில் கலந்துகொண்ட அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மேலும், பாஜகவையும், ஆர் எஸ் எஸ் அமைப்பையும் இந்தியாவின் அரசியல் பேரிடர் என்று சொன்னால் கூட அது மிகையாகாது என திருமா பேசியிருக்கிறார்.
தொடர் குண்டு வீச்சுகள்- தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கான அனுமதியை வாபஸ் பெற கோரி திருமாவளவன் மனு!
விசிக நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கத்தில் இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை நிர்வாகியின் இல்ல திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த விசிக தலைவர் திருமாவளவன், அக்டோபர் 2ஆம் தேதி தாம் அறிவித்துள்ள சமூக நல்லிணக்கப் பேரணி குறித்து விளக்கம் அளித்தார். மேலும், பாஜகவை சாதாரண அரசியல் கட்சியாக கடந்துவிட முடியாது எனக் கூறிய அவர் அது நச்சு சித்தாந்தத்தை கொண்ட கட்சி என விமர்சித்தார்.
கீழ்த்தரமான வேலை
தமிழகத்தில் பாஜகவினரை தவிர வேறு எந்த அரசியல் கட்சியினரும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்றும் அந்தளவுக்கு பாஜகவினர் கீழ்த்தரமான வேலைகளை செய்வார்கள் எனவும் திருமாவளவன் அனல் கக்கினார். எங்கெல்லாம் பாஜக காலூன்ற முயல்கிறதோ அங்கெல்லாம் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படும் என குற்றஞ்சாட்டினார் திருமாவளவன். மேலும், தற்போது ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தை குறிவைக்கத் தொடங்கியிருப்பதாக கூறினார்.
நாடு ஆபத்தில்
பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் வளர வளர நாடு ஆபத்தை நோக்கிச் செல்வதாக கவலை தெரிவித்த திருமாவளவன், பாஜகவையும், ஆர் எஸ் எஸ் அமைப்பையும் இந்தியாவின் அரசியல் பேரிடர் என்று சொன்னால் கூட அது மிகையாகாது என பேசியிருக்கிறார். தமிழகத்தில் இஸ்லாமியர்கள் மீது பழியை போட்டு அவர்களை குற்றவாளிகளாக சித்தரிக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறிய திருமாவளவன், ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகளை தமிழக அரசு தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 2
இதனிடையே அக்டோபர் 2ஆம் தேதி அன்று விசிக முன்னெடுக்கும் சமூக நல்லிணக்கப் பேரணியில், ''வேரறுப்போம்.. வேரறுப்போம்.. சனாதனத்தை வேரறுப்போம்.. வென்றெடுப்போம்.. வென்றெடுப்போம்.. ஜனநாயகத்தை வென்றெடுப்போம்'' என முழக்கமிட்டபடி செல்ல வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.