சீனுக்கு வந்த அன்புமணி மனைவி.. 736 பானைகளை கொண்டு உலக சாதனை! தமிழ்நாடு அரசுக்கு அவசர கோரிக்கை
திருவள்ளூர்: தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவை முன்னிட்டு உலக சாதனை படைக்கும் வகையில் தமிழர்களின் அடையாளங்கள் வரையப்பட்ட 736 பானைகளின் கண்காட்சியில் பசுமைத் தாயகம் தொண்டு நிறுவனத்தின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சவுமியா அன்புமணி பங்கேற்று தமிழின் சிறப்புகள் குறித்து பேசி இருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அருகே கிழ்ச்சேரியில் அமைந்து உள்ள கிரைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சாதனை விழா பாரம்பரியத்துடன் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பசுமைத் தாயகம் தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி விர்ச்சூ புக் ஆஃப் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் அமைப்பின் முதன்மை தீர்ப்பாளர் கார்த்திகேயன் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

736 பானைகளில் தமிழர் அடையாளம்
இந்த விழாவை மெருகூட்டும் வகையில் பானையில் ஓவியம் வரைந்து உலக சாதனை படைக்கும் நிகழ்வும் அரங்கேறியது. இதில் 736 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் கண் கவரும் ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்து இருந்தனர். இந்த பானைகளில் வரையப்பட்ட வண்ணமயமான ஓவியங்கள் அனைவரையும் கவர்ந்தன.

உலக சாதனை விருது
இதற்கான உலக சாதனை விருது வழங்கப்பட்டது. மாபெரும் இந்த சாதனையை நிகழ்த்த அறிவியல் துறை தலைவர் அருட்தந்தை பிரதீப் கிறிஸ்டோபர் வழிகாட்டியாக இருந்தார். பொங்கல் விழாவையும் உலக சாதனை நிகழ்வினையும் ஒருங்கிணைப்புச் செய்யும் பணியினை கல்லூரியின் தமிழ்த் துறை மேற்கொண்டது.

சவுமியா அன்புமணி பேச்ச்
இது குறித்து பேசிய பசுமைத் தாயகம் என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சவுமியா அன்புமணி, "கிழ்சேரியில் அமைந்து உள்ள கிரைஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் சாதனை விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 736 பானைகளில் தமிழர்களின் அடையாளங்களைக் குறிக்கும் வகையில் மாணவர்கள் கண்கவரும் ஓவியங்களை வரைந்து உலக சாதனை படைத்த அனைவரையும் வாழ்த்துவதற்காக பசுமை தாயகம் சார்பாக கலந்து கொண்டோம்.

கீழடி, ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி
கீழடியிலும், ஆதிச்சநல்லூரிலும் பானைகள் மூலமாக தமிழ்குடியுடைய மூத்த வயது என்ன என்று அறிந்து கொண்டு உள்ளோம். அதே போல் இந்த மாணவர்களுடைய பானை 2 ஆயிரம் வருடங்கள் கழித்து கிடைக்கும் போது தமிழ்நாட்டின் மக்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதை 5 ஆயிரம் வருடங்கள் கழித்து கண்டுபிடிப்பார்கள் என்று நினைக்கிறேன். அப்படிப்பட்ட சாதனையை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காலநிலை அவசரநிலை
பசுமை தாயகம் மூலமாக சென்னையில் கால நிலை அவசர நிலை பிரகடனத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்." என்றார். இந்த விழாவில் மாநில இளைஞர் சங்க செயலாளர் பாலா என்கிற பாலயோகி, மேற்கு மாவட்ட செயலாளர் இ.தினேஷ்குமார், கடம்பத்தூர் ஒன்றிய கவுன்சிலர் நா.வெங்கடேசன், மாணவ மாணவிகள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications