"என்னடா வாழ்க்கை இது.. லிப்டில் போகக் கூட பயமா இருக்கே..!" அமைச்சர் மா.சுவை கிண்டலடித்த தமிழிசை
திருவள்ளூர்: செஸ் போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசளித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை, திமுக அமைச்சர் மா. சுவை கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜெயகோபால் கரடியா விவேகானந்தா வித்தியாலயா பள்ளியில் தென் மண்டலம் அளவிலான மாபெரும் சதுரங்க போட்டிகள் கடந்த 30ஆம் தேதி தொடங்கியது.
இந்த மாபெரும் சதுரங்க போட்டியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபர் உள்ளிட்ட மாநில 658 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகரை தேர் போல வழிநடத்திய யானை லட்சுமி! கண்ணீர் விடும் புதுச்சேரி வாசிகள்! தமிழிசை அஞ்சலி
செஸ் போட்டி
5125 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட இந்த மாபெரும் சதுரங்க போட்டியில், அவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் ஒரு குழுவிற்கு 4 நபர்களாக 5 முதல் 6 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெற்றது. லீக் அடிப்படையில் நடைபெற்ற இந்தப் போட்டிகளில் அதிக புள்ளிகளைப் பெற்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. வயது வாரியாக நடத்தப்பட்ட இந்தத் தொடரில் டாப் இடங்களைப் பெற்ற மாணவ- மாணவிகள் தேர்வு செய்யப்பட்டன.
பதக்கங்கள்
நான்கு வயது பிரிவுகளில், ஆண் மற்றும் பெண்கள் அணிகள் என டாப் இடங்களைப் பெற்ற மொத்தம் 16 அணிகள் தேர்வு செய்யப்பட்டன. தேசிய அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளுக்கு இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் பதக்கங்களையும் வழங்கினார்.
தடுப்பூசி
இந்த விழாவில் மேடையில் பேசிய ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "செஸ் விளையாட்டு போன்றுதான் நமது வாழ்க்கையும்.. நாம் முன்னேறிச் செல்ல சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆனால் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்.. அதற்கு ஒரே காரணம் தடுப்பூசி. இந்தியாவில் அனைவருக்கும் வேக்சின் போட அரசு ஏற்பாடு செய்ததது. வேக்சின் பணிகளாலேயே இந்தியாவில் இப்போது வைரஸ் பாதிப்பு இல்லை. இதனால் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம்.
லிப்டில் போக பயம்
சிலருக்கு விமானத்தில் சென்றால் பாதுகாப்பு இல்லை எனத் தோன்றும்.. சிலருக்கு காரில் சென்றால் பாதுகாப்பு இல்லை எனத் தோன்றும். ஆனால் பாருங்கள் இப்போது லிப்டில் செல்வதுகூட பாதுகாப்பாக இருப்பதில்லை.. அப்படியிருக்கும்போது நிச்சயம் என்னடா வாழ்க்கை இது என்றே எண்ணத் தோன்றுகிறது" என்று சுகாதாரத் துறை அமைச்சர் சுப்ரமணியன் லிப்டில் சிக்கிக்கொண்டதைக் கிண்டல் செய்யும் விதமாகப் பேசினார். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அமைச்சர் மா.சு. சென்ற போது லிப்ட் பழுதாகியதால், அமைச்சர் உள்ளேயே சிக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
யானை இறந்த விவகாரம்
தொடர்ந்து பேசிய தமிழிசை, "ஜி 20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை தாங்குவது அனைவரும் பெருமைப் பட வேண்டிய காரியம். இதன்மூலம் விவேகானந்தர் கனவைப் பிரதமர் மோடி நனவாகி உள்ளார்" என்று புகழாரம் சூட்டினார். இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், "புதுச்சேரி கோயில் யானை லட்சுமி இறந்த விவகாரத்திலும் கூட புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி அரியல் செய்கிறார். அனைத்திலும் அரசியல் செய்து வந்தவர் இப்போது யானையிலும் அரசியல் செய்கிறார் என்பதுதான் கவலையாக உள்ளது.
அரசியல் தேவையில்லை
ஒவ்வொருவராகக் குறை கூறி வந்தவர் இப்போது யானைக்கும் வந்துவிட்டார். யானை இறந்தது அனைவருக்கும் வருத்தம் தான்.. இனி வரும் காலத்தில் கோயில் யானைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என வழிமுறைகளை வெளியிடலாம்.. யானை லட்சுமிக்கு ஏற்கனவே உடல்நிலை சரி இல்லாமல் இருந்தது என அவர் கூறுகிறார். யானை இறந்த உடன் அதற்கு உடற்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.. அனைத்திலும் விமர்சனம் செய்வது மக்களை வேறு விதமாகச் சிந்திக்க வைக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.