திருவள்ளூரில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல்.. விசிக பிரமுகர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை: திருவள்ளூர் மணவாள நகர் அருகே நுங்கம்பாக்கத்தில் தனியார் துப்பாக்கி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி மாமூல் கேட்டு திருவள்ளூர் மேற்கு மாவட்ட விசிக துணைச் செயலாளர் எஸ்.கே.குமார் மிரட்டியதாக புகார் எழுந்தது. இது குறித்து தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் போலீசில் புகார் அளித்தார். பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசிக பிரமுகர் எஸ்கே குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
திருவள்ளூர் அருகே மணவாள நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக திருவள்ளூர் மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலாளர் எஸ் கே குமார் என்பவர் மீது துப்பாக்கி தொழிற்சாலையின் நிர்வாகி விஸ்வநாதன் என்பவர் புகார் அளித்தார்.

அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மணவாள நகர் காவல் துறையினர் விசிக பிரமுகர் எஸ்கே குமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்தா சுக்லா அவர்களின் பரிந்துரையின் பேரில், விசிக பிரமுகர் எஸ்கே குமார் மீது குண்டச்சட்டம் பதிவு செய்து திருவள்ளூர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் திருவள்ளூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த நிலையில் திருவள்ளூர் விசிக பிரமுகர் எஸ்கே குமார், தனியார் துப்பாக்கி தொழிற்சாலை முன்பு டவேரா வேனில் மூன்று பேருடன் சென்று இறங்குவதாக வீடியோ உள்ளது. மேலும் அவர்கள் தொழிற்சாலை கேட் முன்பு நின்று நிர்வாகி வெளியில் வரவழைத்து பேசுவதும், அந்த நிர்வாகி கோபத்துடன் கிளம்பிச் செல்வதும் உள்ளிட்ட சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கி தொழிற்சாலையில் மாமூல் கேட்டு மிரட்டியதாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள விசிக பிரமுகர் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications