திருவள்ளூரில் திகைக்க வைத்த அரசு ஊழியர்.. வீட்டு அடமான பத்திரம் வைத்து கடன் கேட்ட நபரால் பரபரப்பு
திருவள்ளூர்: தமிழக அரசின் வருவாய்த்துறையிலும், பதிவுத்துறைகளில் நாளுக்கு நாள் லஞ்சம் வாங்குவோர்கள் அதிகரித்து கொண்டே செல்கிறார்கள்.. இதன்காரணமாக, அரசு அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கையும் களவுமாக சிக்கி, பொதுவெளியிலேயே கைதாகி கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு உரிய தண்டனைகளும், தரப்பட்டு வருகின்றன என்றாலும், லஞ்சம் வாங்குவதும் குறையவில்லை, கைது நடவடிக்கைகளும் குறையவில்லை.. இதோ திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பட்டா கோரியும், நிலத்தை அளக்க கோரியும், சாதி சான்றிதழ் கோரியும், உதவித்தொகை கோரியும், ஏராளமானோர் ஆன்லைனில் விண்ணப்பிக்கிறார்கள். பொதுமக்களுக்காகவே இதற்கென வசதிகள் இணையத்தில் செய்யப்பட்டுள்ளன.

பட்டா, நில அளவீடு
எனினும், தங்களது பணிகள் துரிதமான காரணத்தினால், விண்ணப்பதாரர்கள் அரசு அலுவலகங்களுக்கு நேரடியாகவே செல்ல நேரிடுகிறது.. தங்களது மனுக்கள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்கும்போது, அவர்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் மனம் நொந்துபோகும் விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகார் அளித்து விடுகிறார்கள்.
இந்த புகாரை பெற்றுக் கொள்ளும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை புகார்தாரர்களிடம் தந்து, லஞ்சம் வாங்குவோரை கைது செய்து வருகிறார்கள். இப்படி கைதாகும் நபர்களுக்கு உரிய தண்டனையையும் நீதிமன்றம் தந்து வருகிறது.
அரசு அதிகாரிக்கு தண்டனை
நேற்றுகூட, ராமநாதபுரத்தில் அரசு அதிகாரி ஒருவருக்கு தண்டனை தரப்பட்டுள்ளது.. சூரன்கோட்டையை சேர்ந்த விஸ்வநாதன், தன் அம்மா காமாட்சி பெயரிலுள்ள கம்ப்யூட்டர் பட்டாவில், ஒரு புள்ளியை மட்டும் திருத்தம் செய்ய, ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் இளநிலை உதவியாளரான முகமது திலீப் 47, என்பவரை அணுகினார். அதற்கு முகமது திலீப், ரூ.1000 லஞ்சம் கேட்டாராம்.. இதையடுத்து, கடந்த 2015 மார்ச் 18ம்தேதி முகமது திலீப் கைதானார்.
ஆனால் ஜாமீனில் வந்துவிட்டார்.. எனினும், வழக்கு விசாரணை ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது முகமது திலீப்புக்கு 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி மோகன்ராம் தீர்ப்பளித்துள்ளார்.. இப்போது முகமது திலீப் ராமநாதபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். வெறும் 1000 ரூபாய் லஞ்சம் கேட்டு, அரசு வேலையை இழந்து, இப்போது 4 வருடம் சிறை செல்ல நேரிட்டுள்ளது.
வீட்டு விற்பனை பத்திரம்
அதோ திருவள்ளூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. திருவள்ளூர் ஒன்றியம், பெருமாள்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் ஓட்டல் தொழில் செய்வதற்காக அவருடைய பெற்றோர் பெயரிலுள்ள வீட்டு பத்திரத்தை, மாவட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தில் அடமானம் வைத்து கடனாக பணம் பெற முயன்றுள்ளார்.. இதற்காக அனைத்து ஆவணங்களையும் தந்து, கடன் கேட்டுள்ளார்.
அதன்படி, கடந்த 27-ம் தேதி சிவக்குமாரின் தந்தை பெயரில் ரூ.11.76 லட்சத்துக்கு காசோலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், காசோலையை வழங்கும்போது கூட்டுறவு சங்கத்தில் செயலாளராக பணிபுரியும் ராமலிங்கம் என்பவர் லஞ்சமாக ரூ.17 ஆயிரம் கேட்டுள்ளார்.. மேலும் அந்த லஞ்சப்பணத்தை கணக்காளராக பணிபுரியும் ஏகாம்பரத்திடம் வழங்குமாறு தெரிவித்துள்ளார்.
2 பேருமே ஒரே நேரத்தில் கைது
பிறகு, கணக்காளர் ஏகாம்பரத்திடம் சிவக்குமார் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை எடுத்துக்கூறி, லஞ்சப் பணத்தைக் குறைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ஏகாம்பரம் ரூ 15 ஆயிரமாக குறைத்தாராம்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தை சிவகுமாரிடம் தந்து, திருவள்ளூர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தின் செயலாளர் ராமலிங்கம் மற்றும் கணக்காளர் ஏகாம்பரத்திடம் ரூ.15 ஆயிரம் லஞ்சம் பணம் கொடுத்தார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் இருவரையுமே கைது செய்தனர். இப்போது 2 பேரிடமும் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications