காலைல 8 மணிக்கு வந்த ஒரு போன் காலில் மர்மம் இருக்கு.. திருவள்ளூர் மாணவியின் சகோதரி பரபரப்பு புகார்
திருவள்ளூர்: "என் தங்கச்சி இறந்துவிட்டதாக எங்களுக்கு காலை 8 மணிக்குத்தான் தகவல் வந்தது. அவள் சாவில் மர்மம் இருக்கிறது என திருவள்ளூர் கீழச்சேரி பள்ளி விடுதி மாணவி இறப்பு விவகாரத்தில் அவரது சகோதரி பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
Recommended Video
திருவள்ளூரில் மப்பேடு அருகே கீழச்சேரியில் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் தெக்களூரை சேர்ந்த 17 வயது மாணவி பிளஸ் 2 படித்து வந்தார்.
இங்கு விடுதி வசதி இருப்பதால் அவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை சிற்றுண்டியை சாப்பிட்டுவிட்டு சென்ற மாணவி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருத்தணி மருத்துவமனை
இதையடுத்து அந்த மாணவி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மாணவி இறப்பு குறித்து பள்ளி நிர்வாகம் முறையாக பெற்றோருக்கு தெரிவிக்கவில்லை என கூறி உறவினர்களும் கிராம மக்களும் நேற்றைய தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

பிரேத பரிசோதனை
இந்த நிலையில் இன்றைய தினம் அந்த மாணவிக்கு பிரேத பரிசோதனை திருத்தணி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ளது. அப்போது அங்கு மாணவியின் உறவினர்கள் திரண்டனர். பள்ளி நிர்வாகத்தினர் ஒருவர் விடாமல் இந்த இடத்திற்கு வந்தால் மட்டுமே சடலத்தை பெறுவோம் என உறவினர்கள் தெரிவித்தனர்.

மாணவியின் இறப்பு
மேலும் மாணவியின் இறப்பு குறித்து அவரது தாய்மாமனின் மகள் (அக்கா) கூறுகையில், என் தங்கச்சி இறந்துவிட்டதாக பள்ளி நிர்வாகத்தினர் எங்களுக்கு காலை 8 மணிக்குத்தான் போன் செய்தனர். ஆனால் காலை 6 மணிக்கே மீடியாக்கள், போலீஸாருக்கு தெரிந்துவிட்டது.

மருத்துவமனை
அவர் இறந்த விவகாரத்தையோ மருத்துவமனையில் சேர்த்த விவகாரத்தையோ எங்களுக்கு தெரிவிக்காமல் இருந்தது ஏன். இதில் ஏதோ மர்மம் இருக்கிறது. எங்களுக்கு ஏன் போன் செய்யவில்லை என கேட்டதற்கு சக மாணவிகளிடம் இருந்து உங்கள் போன் நம்பரை வாங்கி செய்ய லேட்டானதாக கூறுகிறார்கள். என் தங்கை இறந்த முதல் நாள் இரவு நாங்கள் விடுதிக்கு போன் செய்து பேசினோம். பிறகு எப்படி எங்களது நம்பர் இல்லாமல் இருக்கும். அட்மிஷன் போடும் போதே வீட்டு முகவரி, போன் நம்பர் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டார்களே என கண்ணீருடன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications