திருவண்ணாமலையில் கண் இமைக்கும் நேரத்தில் கொடுமை.. பஸ்- டாடா சுமோ மோதல் .. உடல் நசுங்கி 7 பேர் மரணம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே அரசுப் பேருந்தும், டாடா சுமோ காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணித்த 7 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
10 வினாடி கவனக்குறைவு பலரையும் விபத்தில் சிக்க வைத்துவிடுகிறது. விபத்திற்கு 10 வினாடிக்கு முன்பு ஒருவர் சாதாரித்தால் நிச்சயம் தப்பிவிட முடியும். துரதிஷ்டவமாக விபத்திற்கு ஒரு சில நொடிகளுக்கு முன்பே விபத்தில் சிக்க போகிறோம் என்பது டிரைவர்களுக்கு தெரிய வருகிறது. அப்போது ஒன்றும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. பெரும்பாலான விபத்திற்கு கவனக்குறைவு காரணம் என்றாலும், அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலை போன்றவை தான் விபத்திற்கு மூலக்காரணமாக இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசுப் பேருந்தும், டாடா சுமோ காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டதில் பெரும் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. என்ன நடந்தது?
திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரு நோக்கி டாட்டா சுமோ காரில் பத்து பேர் பயணம் செய்துள்ளார்கள். எதிரே பெங்களூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து செங்கம் அருகே வேகமாக வந்து கொண்டு இருந்தது. பேருந்தும், எதிரே காரும் செங்கம் பக்கிரிபாளையம் புறவழிச்சாலை அந்தனூர் பகுதி வந்த போது, டாடா சுமோ காரும், பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி வந்த அரசு பேருந்தும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.
இந்த விபத்தில் டாடா சுமோ காரில் பயணம் செய்த 7 நபர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். டாடா சுமாவில் வந்த மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.இதேபோல் பேருந்தில் முன்பக்கம் அமர்ந்திருந்த 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த 14 பேரும் உடனடியாக செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உயிருக்கு ஆபத்தான நிலையில் சிலர் சிகிச்சை பெற்றுவருவதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்ற அச்சமும் உள்ளது.
பேருந்தும் காரும் நேருக்குநேர் பயங்கர வேகத்தில் மோதியதே அதிகம் பேர் உயிரிழக்க காரணம் என்று கூறப்படுகிறது.இதனிடையே விபத்தில் சிக்கிய டாடா சுமோ விபத்தில்பயங்கரமாக நொறுங்கிய நிலையில் அதனை பேருந்தில் இருந்து தனியாக பிரித்து இடிபாடுகளை அகற்றும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.விபத்தில் இறந்தவர்கள் குறித்த விவரம் உடனடியாக வெளியாகவில்லை.
எடப்பாடி பழனிசாமி இரங்கல்: இதனிடையே இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், " திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், பக்கிரிபாளையம் பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் சிறுவர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்வதுடன், விபத்தில் காயமுற்றவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சையளிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துகிறேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரண நிதியை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்." என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications