இதுபோல் யாருக்கும் நடக்கக்கூடாது.. அதிகாரிகளே காரணம்.. வீடியோ வெளியிட்டு டிரைவர் தற்கொலை
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஆக்கிரமிப்பு நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், மன உளைச்சலுக்கு ஆளான டிரைவர் மணிகண்டன் செல்போனில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த 37 வயதாகும் மணிகண்டன் டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு வயதில் மகன் இருக்கிறார்.

மணிகண்டனுக்கு சொந்தமான இடத்தை ஒருவர் ஆக்கிரமித்து உள்ளாராம். இந்த பிரச்சினை தொடர்பாக மணிகண்டன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளிடம் பலமுறை சென்று மனு அளித்துள்ளார். ஆனால் இடத்தை அளப்பது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டன் மரத்தில் ஏறி தற்கொலைக்கும், மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்கவும் முயன்றுள்ளார். ஆனாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
தனது பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன் வீடியோ ஒன்றை பதிவிட்டுவிட்டு வியாழக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு வெளியிட்ட வீடியோ பதிவில் மணிகண்டன் கூறுகையில், நான் வைத்த கோரிக்கை தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த விஷயத்தில் தாசில்தார், சர்வேயர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அதிகாரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நான் இறந்த பிறகாவது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நடந்தது போல் யாருக்கும் நடக்கக்கூடாது என்று பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மணிகண்டன் இறந்தது குறித்து அக்கம் பக்கத்தினர் சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது தொடர்பாக சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணிகண்டனின் மனைவி சுகன்யா அளித்த புகாரில், ஆக்கிரமிப்பு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காமல் தனது கணவரின் சாவுக்கு காரணமாக இருந்ததாக சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.












Click it and Unblock the Notifications