திருவண்ணாமலையில் ’கேடி’ சாமியார்கள்? போலீஸ் போட்ட கிடுக்குப் பிடி! கஞ்சா தொல்லை இனி இல்லை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்து, புதிய அடையாள அட்டை வழங்கும் பணியை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய உலகப் பிரசித்திப் பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில், பவுர்ணமி நாளில், ஒவ்வொரு மாதமும் பக்தர்கள் குவிந்து வருவது வழக்கம். குறிப்பாக, கோவிலின் மலையைச் சுற்றி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
சிறப்புமிக்க இந்த கிரிவல பாதையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் துறவறம் மேற்கொண்டவர்கள், இங்கு சாதுக்களாக வாழ்ந்து வருகின்றனர்.
அன்னூரில் கடையை திறந்த அவ்வளவுதான்!கடைகடையாய் மிரட்டிய பாஜகவினர்! மொத்தமாய் அள்ளிச் சென்ற காவல்துறை!
போலி சாமியார்கள்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், சாதுக்கள் என்ற போர்வையில், குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் மற்றும் போலி சாமியார்களின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கஞ்சா புகைக்கும் சில சாதுக்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுவதோடு, கிரிவலப் பாதையில் செல்லும் பக்தர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகின்றனர்.
சாதுக்கள் சுய விவரங்கள்
இதனைத் தடுக்கும் வகையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில், கிரிவலப் பாதையில் வாழ்ந்து வரும் சாதுக்களின் கைரேகை மற்றும் புகைப்படத்துடன் சுய விவரங்களை சேரிக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது. இப்பணி இன்றுமுதல் 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. சாதுக்களிடம் சேகரிக்கப்படும் விவரங்களைக் கொண்டு, ஏற்கெனவே எவரேனும் குற்றப் பின்னணியில் ஈடுபட்டுள்ளார்களா என ஆய்வு செய்து, அதன் பின்னர், அவர்களுக்கு OR Code உடன் கூடிய அடையாள அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
புகார் தெரிவிக்கலாம்
மேலும், கிரிவலப் பாதையில் உள்ள சாதுக்களில், எவரேனும் சிலர், கஞ்சா, குட்கா, சாராயம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ காவல்துறைக்கு தகவல் அளிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 9159616263 என்ற எண்ணுக்கு அழைத்து இதுதொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.
இரவு நேர தங்கும் விடுதி
மேலும், சாதுக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் அமைத்து தந்தால் அங்கு தங்குவீர்களா? என மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் சாதுக்களிடம் கேட்டறிந்தார். சாதுக்களிடம் வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கேட்டார். இரவு நேரத்தில் சாதுக்கள் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுக்கப்படும் எனக் கூறிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயனுக்கு, சாதுக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.