எனக்கு திருவண்ணாமலை போதும் சாமி... எ.வ.வேலுவின் அரசியல் மனமாற்றப் பின்னணி..?
திருவண்ணாமலை: திமுகவில் மாநில அளவில் உட்கட்சி பிரச்சனைகள் பற்றி பஞ்சாயத்து பேசி வந்த முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சமீபகாலமாக திருவண்ணாமலை மாவட்ட அரசியலுடன் தனது எல்லையை சுருக்கிக் கொண்டார்.
மாநில அளவில் கட்சி நிர்வாகிகளில் ஒரு தரப்பினர் தன்னை பற்றி தவறான புரிதலோடு உள்ளதால் தலைமையிடம் இருந்து சற்று விலகியே இருந்து வருகிறார் எ.வ.வேலு.
இதனிடையே கே.என்.நேரு மாநிலம் தழுவிய அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிரடியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆக்ஷன் எடுக்கப்பட வேண்டியவர்கள் பட்டியலை தயாரித்து வருகிறார்.
வேதரத்தினத்தை இழுத்த திமுக.. ஜீவஜோதியை கையில் எடுக்கும் பாஜக.. அடுத்து என்னவெல்லாம் ஆகுமோ?!
எ.வ.வேலு
எம்.ஜி.ஆர். காலம் முதல் அதிமுகவில் இருந்த எ.வ.வேலு அவரது மறைவுக்கு பிறகு திமுகவில் இணைந்தார். தண்டராம்பட்டு வேலு என்ற அடைமொழியுடன் கூடிய தனது பெயரை எ.வ.வேலு என மாற்றிக்கொண்டார். திமுகவில் அமைச்சர், மாவட்டச் செயலாளர் என பல பதவிகளை வகித்து இன்று இரண்டாம் கட்ட தலைவர்கள் வரிசையில் உள்ளார் இவர். திமுக பொருளாளர் ரேஸில் கூட எ.வ.வேலு பெயர் அடிபடுகிறது.
நிர்வாகிகள் புகார்
அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி கடுமையான முறையில் குற்றஞ்சாட்டியது எ.வ.வேலு மீது தான். அவர் தான் தனக்கு கிடைக்க வேண்டிய ராஜ்யசபா சீட்டை கிடைக்கவிடாமல் செய்தவர் என்ற தொணியில் ஒன் இந்தியா தமிழிடம் துரைசாமி பகிர்ந்துகொண்டார். ஸ்டாலினுடன் இருக்கும் தனது நெருக்கத்தை பயன்படுத்தி அனைத்து விவகாரங்களிலும் வேலு தலையிடுகிறார் என்பதும் பிடிக்காதவர்களை பற்றி போட்டுக்கொடுக்கிறார் என்பதும் அவர் மீதான புகார்கள்.
மாவட்ட அரசியல்
இதனால் மாநில அளவில் நிர்வாகிகளில் சிலர் தன்னை பற்றி தவறான புரிதலில் உள்ளதாக வருத்தப்பட்ட எ.வ.வேலு, இனி திருவண்ணாமலை மாவட்ட அரசியல் மட்டும் போதுமானது என்ற மனநிலைக்கு வந்துள்ளார். எந்த மாவட்டத்தில் உட்கட்சி பிரச்சனை என்றாலும் தனது பெயர் உருட்டப்படுவதை நினைத்து வேலு வேதனைப்பட்டுள்ளார். இதனால் மற்ற மாவட்டங்களில் இருந்து உட்கட்சி பிரச்சனை தொடர்பாக தன்னை யாரேனும் அணுகினால் தாம் தலையிடுவதில்லை என இப்போது பதில் அளித்து வருகிறார்.
போட்டி அதிகம்
திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் வந்துவிட்டால் அவர் வகித்து வரும் பொருளாளர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில் அதில் எ.வ.வேலுவும் உள்ளார். இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளவேண்டாம் என்பதற்காகவே திருவண்ணாமலை அரசியல் போதும் என்ற மன நிலைக்கு வந்துள்ளார் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.