"ஒருபிடி மண்ணை கூட தர முடியாது".. 8 வழிச்சாலைக்கு எதிராக விவசாயிகள் கருப்பு கொடியுடன் போராட்டம்
திருவண்ணாமலை: சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக, விளை நிலங்களில் விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் திருவண்ணாமலை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
8 வழிச்சாலை திட்டத்தை எப்பாடுபட்டாவது செயல்படுத்தியே தீருவோம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளதற்கு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. சிறிது நாட்களாக தேர்தல் பரபரப்பினால் அடங்கியிருந்து 8 வழிச்சாலை விவகாரம் தற்போது மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இத்திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கருத்து தெரிவித்த தமிழக அரசு இவ்விகாரத்தில் மேல்முறையீடு செய்யப்படாது என கூறியது. இதனை நம்பிய 5 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள், சற்று நிம்மதியாக இருந்தனர்.
ஆனால் தேர்தல் பிரச்சாரத்தின் போது சேலத்தில் பேசிய நிதின் கட்கரி, முதல்வரை மேடையில் வைத்து கொண்டே சென்னை - சேலம் இடையிலான 8 வழிச்சாலை திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றார். அப்போது பெரும் சலசலப்பு எழுந்தது. மத்திய அரசை எதிர்க்க திராணியில்லாத தமிழக அரசு ஆட்சியில் நீடிக்க தகுதி இல்லை என எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளிவந்து, மத்தியில் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற சில மணி நேரங்களிலேயே 8 வழிச்சாலைதிட்டத்திற்கு எதிரான சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனால் தமிழகமே அதிர்ச்சியடைந்தது.
மத்திய அரசின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ஐகோர்ட்டின் உத்தரவுக்கு உடனடியாக தடை விதிக்க முடியாது. மேலும் 8 வழிச்சாலைக்கு நிலங்கள் முறையாக எடுக்கப்படவில்லை என காட்டமாக கூறியது. மேலும் வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் சேலத்தில் இரு நாட்களுக்கு முன் பேசிய முதல்வர், 8 வழிச்சாலை திட்டம் தனி நபருக்கானது அல்ல. மக்களுக்கானது தான், எனவே எதிர்க்கும் மக்களை சமாதானப்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்றார்.
இதனால் மீண்டும் இவ்விகாரம் கடந்த 2 நாட்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதல்வரின் பேச்சை கண்டித்து 5 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திருவண்ணாமலை ராந்தம் மலைமேட்டில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விளைநிலங்களில் கருப்பு கொடியை ஏந்தி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். சொந்த மக்கள் என்றும் பாராமல் அவர்களின் நிலங்களை கையகப்படுத்துவதில் தீவிரம் காட்டுவதாக, முதல்வருக்கு எதிராகவும் கோஷமிட்டனர். 8 வழிச்சாலை திட்டத்திற்காக ஒரு பி்டி மண்ணை கூட விட்டுத் தர மாட்டோம் என கருப்பு கொடியுடன் ஆவேசமாக முழங்கினர்.