அன்புமணி சீரியஸாக பேசிக்கொண்டிருக்கும்போதே திடீரென மைக்கை எடுத்த ராமதாஸ்.. சொன்ன அந்த ஒரு வார்த்தை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் பாமக சார்பில் இன்று நடந்த உழவர் பேரியக்கத்தின் மாநாட்டில் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, மைக்கை எடுத்து பாமக நிறுவனர ராமதாஸ் சொன்ன கருத்தால் தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சாலையில் பாமக சார்பில் உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. உழவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பேசிய அன்புமணி ராமதாஸ், திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேச்சு
அன்புமணி ராமதாஸ் பேசுகையில், "தமிழ்நாட்டில் சமீபகாலத்தில் இப்படி ஒரு உழவர் மாநாடு நடந்தது கிடையாது. இந்த மாநாட்டை யாருக்கும் எதையும் நிரூபிப்பதற்காக நடத்தவில்லை. மாறாக உழவர்களின் உரிமைகளை மீட்டெடுக்க நடத்தப்படுகிறது. எங்களைப் போன்று தமிழ்நாட்டில் எந்த அரசியல் கட்சியும் கிடையாது. உழவர்கள் பற்றி அரசியல் கட்சிகளுக்கு கவலை கிடையாது. ஆளும் திமுக ஆட்சி முதலாளிகளுக்காக நடத்தப்படும் ஆட்சி.
இவ்வளவு பெரிய மாநாட்டை நடத்துகின்ற சக்தி நமக்கு மட்டும் தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை. டெல்லியில் விவசாயிகள் போராட்டம் என்றால், 2, 3 மாதம் விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள். அதேபோல், இத்தனை விவசாயிகளும் சென்னை நோக்கி செல்ல வேண்டும். உங்கள் கோபத்தை வெளிப்படுத்துங்கள். அதுதான் என் ஆசை. சோறு போடும் கடவுள் விவசாயிகள்.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் விவசாயத்திற்கும் என்ன சம்பந்தம்? தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் பாவப்பட்ட ஜென்மங்களாக உள்ளனர்.
அமைச்சர் அல்ல, வியாபாரி
கொடுங்கோல் ஆட்சியில் கூட விவசாயிகள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டம் போடப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் விவசாயிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மக்கள் போராடுவதால் தொழிற்சாலையை கொண்டு ஆகாயத்தில் அமைக்க முடியுமா? என ஒரு அமைச்சர் கேட்கிறார். அவர் அமைச்சர் அல்ல, அவர் ஒரு வியாபாரி. விளைநிலங்களில் தொழிற்சாலையை அமைத்துவிட்டு உணவுக்கு என்ன செய்வீர்கள்? ஆகாயத்தில் இருந்து உணவு வருமா?
விவசாய நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்திடம் கொடுத்து, அதன் மூலம் மக்களுக்கு அறிவு வளர்க்க உள்ளனராம். விளை நிலங்களை அழித்து அறிவுசார் நகரம் அமைக்க வேண்டுமா? பரந்தூரில் விமான நிலையம் நிச்சயம் வரக்கூடாது. விமான நிலையம் திருப்போரூரில் தான் அமைய வேண்டும்." எனப் பேசினார்.
முதல்வரை பார்த்து கேட்கிறேன்.. பாவம் பண்ணவங்களா நாங்க?
மேலும், "முதல்வர் ஸ்டாலினை கேட்கிறேன். சென்னையில் வெள்ளம் வந்தது. சென்னை மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள். தென்காசி, தூத்துக்குடியில் வெள்ளம் வந்தது. சென்னை மக்களுக்கு ஒரு வீட்டுக்கு 6000 ரூபாய் கொடுக்கிறீர்கள். ஆனால், கடலூரில் வெள்ளம் வந்தது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலையில் வெள்ளம் வந்தது. ஆனால், 2000 ரூபாய் மட்டும் கொடுக்கிறீர்கள்.
சென்னை மக்கள் மட்டும் புண்ணியம் பண்ணவர்கள்.. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்கள் பாவம் பண்ணியிருக்கிறார்களா? முதலமைச்சர் இதற்கு பதில் அளிக்க வேண்டும்" என அன்புமணி ஆவேசமாக பேசினார்.
குறுக்கிட்ட ராமதாஸ்
அன்புமமணி பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென மைக்கை எடுத்த பாமக நிறுவனர் ராமதாஸ், "முதலமைச்சருக்கு அன்புமணி சொல்வது புரிந்தால் தானே பதில் சொல்ல முடியும். புரியாமல் என்ன பதில் சொல்வார் அவர்?" என சிரித்தபடி கேள்வி எழுப்பினார். ராமதாஸ் பேச்சுக்கு பாமக தொண்டர்கள் உற்சாக ஆரவாரம் செய்தனர்.
அதன் பிறகு பேசிய ராமதாஸ், "நான் அடிப்படையில் ஒரு விவசாயி. திராவிட மாடல் விவசாயிகளுக்கு எதிரானது. விவசாயிகளைப் படுகுழியில் தள்ளியது திராவிட மாடல் அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. வேளாண் கல்வி ஊக்குவிக்கப்பட்டு, விளைபொருட்களுக்கு அரசே கொள்முதல் செய்து உரிய விலையை கொடுக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த வேண்டும்.
வேளாண்மைக்கு முன்னுதாரணமாக இஸ்ரேல் இருக்கிறது. தண்ணீரே இல்லாத இஸ்ரேல் விவசாயத்தில் சாதித்து கொண்டிருக்கிறது. 12 ஆண்டுகளில் 8 கோடி மரங்களை இஸ்ரேல் நட்டிருக்கிறது. அந்த இஸ்ரேல் மாடல், தமிழகத்திற்கு வேண்டும். வறட்சியாலும் வெள்ளத்தாலும் தொடர்ந்து தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் அதிகம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் ஏற்படும் வறட்சி செயற்கையாக ஏற்படுத்தப்படும் ஒன்றாகும். தண்ணீர் மேலாண்மையில் தமிழ்நாடு கீழே இருப்பது என்பது கவலையளிக்கிறது. ஆற்று மணல் கடத்தலை தமிழக அரசு தடுக்க வேண்டும். மணல் வியாபாரத்தை அரசு தடுக்காவிட்டால், தமிழ்நாட்டின் ஆறுகள் மரணிக்கும்" எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications