திருவண்ணாமலையின் தூக்கத்தை பறித்த "பாறை"..நீளும் மீட்பு பணி.. முதல்வர் ஸ்டாலின் ரூ.5 லட்சம் இழப்பீடு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கனமழையின் காரணமாக பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே, மீட்புப்பணியை இன்று மீண்டும் தொடர தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
புயல் காரணமாக, கடந்த 3 நாட்களாகவே தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதில், புதுச்சேரி, விழுப்புரத்தை போலவே, திருவண்ணாமலையிலும் பலத்த மழை கொட்டியது.

ராட்சத பாறை: குறிப்பாக, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில் மலையின் அடிவாரத்தில் பாதிப்பு இந்த மலையிலிருந்து ராட்சத பாறை ஒன்று மலையின் அடிவாரத்தில் வஉசிநகர் பகுதியில் நேற்று முன்தினம் மாலை திடீரென உருண்டு விழுந்தது. குடியிருப்புகளுக்கு மேலேயே இந்த ராட்சச பாறைகள் விழுந்ததால், வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்துவிட்டன.
புதைந்த அந்த வீட்டுக்குள் ராஜ்குமார்(32), அவருடைய மனைவி மீனா (26), அவர்களின் மகன் கவுதம் (9), மகள் இனியா (7) மற்றும் ராஜ்குமார் உறவினர்களின் மகள்கள் மகா (12), வினோதினி (14), ரம்யா (12) ஆகிய 7 பேர் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து, போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டார்கள்.. இந்த தகவல் கிடைத்ததுமே, மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
புதைந்த உடல்கள்: மண்ணில் புதைந்தவர்களை விரைந்து மீட்கும் பணியையும் துரிதப்படுத்தினார்கள்.. இதனிடையே, அந்த பகுதியில் வசித்த 80 பேரும் நிவாரண முகாமிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டு, தங்க வைக்கப்பட்டனர். ஆனால், மண்ணில் புதைந்தவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை.. தொடர்ந்து மழை பெய்து கொண்டேயிருந்ததாலும், மண்ணை வெளியேற்ற முடியாததாலும், இரவு நேரம் என்பதாலும், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
இதனிடையே, நேற்று அதிகாலை அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் திருவண்ணாமலை வந்து, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தேசிய பேரிடர் மீட்புக்குழு, மாவட்ட போலீஸ் கமாண்டோ குழு, மாநில மீட்பு படை, திருவண்ணாமலை ஆயுதப்படை போலீசார் உள்பட 170 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டதில், நேற்று மாலை மண்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
நவீன எந்திரங்கள்: ஆனால், இதில் மேலும், 2 குழந்தைகள் வீட்டின் உள்பகுதியில் சிக்கிக்கொண்டதால், அவர்களை மீட்பதில் மீண்டும் சிரமம் ஏற்பட்டது. அங்கு மண்ணுடன் சேர்ந்து ஒருபாறையும் இருந்ததால், அந்த பாறையை உடனடியாக அகற்ற முடியவில்லை. நவீன எந்திரங்கள் மூலம் பாறையை வெட்டி அப்புறப்படுத்தினால் மட்டுமே 2 குழந்தைகளையும் மீட்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது.
அதனால், மீட்கப்பட்ட 5 பேரின் உடல்கள் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், மீட்புப்பணிகளும் நேற்றிரவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மீட்புப்பணியை இன்று தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் தொடர உள்ளனர். மோப்ப நாய்கள் மூலம் உடல்களை தேடும் பணியும் இன்று ஆரம்பமாக உள்ளது.
முதல்வர் உத்தரவு: இதனிடையே, உயிரிழந்த 7 பேரின் குடும்பத்தினருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார்.
அந்த அறிக்கையில், "திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், வ.உ.சி. நகர் 11-வது தெருவில் வசித்து வந்த .ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது 01-12-2024 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் கனமழையின் காரணமாக மரம் விழுந்ததை அறிந்து அவர் வீட்டின் கதவினை திறக்க முற்பட்டபோது மலையிலிருந்து பெரிய பாறை உருண்டு வந்து வீட்டின் மேல் விழுந்ததில் அவரது வீடு மண் மற்றும் பாறையால் மூடப்பட்டு இடிந்துள்ளது.
மீட்பு பணிகள்: இதனையறிந்து மாவட்ட நிர்வாகத்தினரால் தேசிய பேரிடர் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படையின் கமாண்டர் உட்பட 39 வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நேற்று 02-12-2024 மாலை 6.30 மணியளவில் தேசிய பேரிடர் மீட்புப் படையினரின் முயற்சிகள் பலனளிக்காமல் துரதிஷ்டவசமாக அந்த வீட்டின் உள்ளே இருந்த ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி மீனா (வயது 27), மகன் கௌதம் (வயது-9), மகள் இனியா (வயது-5), பக்கத்து வீட்டில் வசித்து வரும் சரவணன் என்பவரின் மகள் ரம்யா (வயது-7) மஞ்சுநாதன் என்பவரின் மகள் விநோதினி (வயது-14) மற்றும் சுரேஷ் என்பவரின் மகள் மகா (வயது-7) ஆகிய ஏழு நபர்கள் மண்ணுக்கடியில் சிக்கி உயிரிழந்தனர்.
ரூ.5 லட்சம் அறிவிப்பு: இந்தத் துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஐந்து இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவராண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மீட்பு பணிகளில் முழுமையாக ஈடுபடவில்லை என்று கூறி, உறவினர்கள் இன்று காலையில், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.. இடிபாட்டில் சிக்கியுள்ள ராஜ்குமார், இனியா இவர்களின் உடலையும் உடனடியாக மீட்க வேண்டும் என்றும் முழக்கமிட்டு வருகிறார்கள். "வெறும் 5 பேரை மட்டுமே மீட்டுள்ளனர்.. 7 பேர் என்று பொய் தகவலை பரப்புகிறார்கள்.. மீட்பு பணிகள் மிகவும் தாமதமாக நடக்கிறது.. முழுமையாக அனைவரையும் மீட்கவில்லை, எங்களை அனுமதித்தால் நாங்களே மீட்பு பணியில் இறங்கவோம்" என்றும் உறவினர்கள் குற்றஞ்சாட்டி வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications