திருவண்ணமலையில் மின்னிய மூணு சவரன் தங்க சங்கிலி.. மூதாட்டியிடம் வேலையை காட்டிய தவெக நிர்வாகி கைது!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் மூதாட்டிக்கு லிப்ட் கொடுப்பதை போல நடித்து, மூன்று சவரன் தங்க செயினை பறித்து சென்ற தவெக நிர்வாகியை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.
தங்கம் விலை சமீப நாட்களாகவே ராக்கெட் வேகத்தில் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நகை திருட்டு சம்பவங்களும் அதிகரித்திருக்கின்றன. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நடந்த நகை திருட்டு சம்பவம் பேசு பொருளாகி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஒண்டி குடிசை பகுதியை சேர்ந்தவர் மலர். 61 வயதான மூதாட்டியான இவர் கிடைக்கும் வேலையை செய்து அன்றாடம் பிழைப்பை ஓட்டி வந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று பக்கத்தில் உள்ள ஊருக்கு போக பைக்கில் வந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார். அந்த வழியாக வந்த கௌதம் என்கிற இளைஞர், மூதாட்டிக்கு லிப்ட் கொடுத்திருக்கிறார். ஆனால் போக வேண்டிய இடத்திற்கு முன்கூட்டியே வாகனத்தை நிறுத்திய கௌதம், இதற்கு மேல் பைக் போகாது என்று கூறியிருக்கிறார்.
அப்போது திடீரென மூதாட்டியின் கழுத்திலிருந்து மூன்று சவரன் தங்க செயினை பறித்துக்கொண்டு சட்டென பைக்கில் பறந்திருக்கிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத மூதாட்டி, கூச்சலிட்டு இருக்கிறார். ஆனால் அது ஆட்கள் நடமாட்டம் குறைவாக உள்ள பகுதி என்பதால் யாரும் வரவில்லை. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மூதாட்டி போலீசில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் பேரில் போலீசார், இந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை பதிவு செய்தனர்.
அதில் பைக் போன பாதையை வைத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், செயின் பறிப்பில் ஈடுபட்டது ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த கவுதம் என்பதும், அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து நகையை மீட்டனர்.
தவெக நிர்வாகி ஒருவர் செயின் திருட்டில் ஈடுபட்டிருக்கும் சம்பவம் தமிழகத்தில் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications