2001வரை நானும் சாதாரண குடும்பத் தலைவி தான்! உற்சாகம் குறையாத அதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசுதா!
திருவண்ணாமலை: அதிமுகவில் பல ஆண்டுகளுக்கு பிறகு பெண் ஒருவரை மாவட்டச் செயலாளராக அறிவித்து புருவம் உயர்த்த வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அப்ப பலஆண்டுகளுக்கு முன் அதிமுகவில் வேறு யாரும் பெண் மாவட்டச் செயலாளர் இருந்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுவது புரிகிறது. ஆம், நெல்லை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளராக வசந்தி முருகேசனை ஜெயலலிதா இருந்தபோது நியமித்தார். அவர் தான் அதிமுகவின் முதல் பெண் மாவட்டச் செயலாளர்.

இந்த வரலாறு அறியாமல் பலரும் அதிமுகவில் முதல் பெண் மாவட்டச் செயலாளரை எடப்பாடி பழனிசாமி தான் நியமித்ததாக கூறிவருகின்றனர். இதனிடையே ஜெயசுதா என்பவரை திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலாளராக(அதிமுகவின் 2வது பெண் மாவட்டச் செயலாளர்) எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ள நிலையில் ஜெயசுதாவை தொடர்பு கொண்டு புதிய பதவி பெற்றது பற்றி பேசினோம். அப்போது உற்சாகம் குறையாமல் ஜெயசுதா நம்மிடம் பேசியதாவது;
''என் மீது நம்பிக்கை வைத்து என்னை மாவட்டச் செயலாளராக்கிய அண்ணனுக்கு போளூர், ஆரணி ஆகிய 2 தொகுதிகளிலும் வெற்றிக்கனியை பறித்து காணிக்கையாக கொடுப்பேன். நானும் எல்லோரையும் போல் 2001 வரை சாதாரண குடும்பத் தலைவியாக தான் இருந்தேன். அம்மா மீது கொண்ட பற்று காரணமாக என்னை 2001ஆம் ஆண்டு அதிமுகவில் இணைத்துக்கொண்டேன்.''
''2007ஆம் ஆண்டு அம்மா என்னை ஒன்றியச் செயலாளர் ஆக்கினார். 2011ல் எம்.எல்.ஏ. சீட் கொடுத்து வெற்றிபெற வைத்தார். இப்போது எடப்பாடி பழனிசாமி அண்ணன் மாவட்டச் செயலாளர் பதவி வழங்கியுள்ளார். என்னை பொறுத்தவரை அரசியலில் பாலின பாகுபாடு என்பதே பார்க்கக் கூடாது. ஆண் நிர்வாகிகளுக்கு இணையாக என்னாலும் கட்சிப்பணியாற்ற முடியும். அதற்கு எனது குடும்பத்தினர் ஆதரவு எனக்கு எப்போதும் உண்டு.''
''எனது கணவர் லட்சுமிகாந்தன் பட்டு நெசவுத் தொழில் செய்து வருகிறார். எனக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார்கள். அவர்கள் கொடுக்கும் ஊக்கமும் ஆதரவும் என்னை இன்னும் உற்சாகத்தோடு அரசியல் செய்ய வைக்கிறது. அமைச்சர் எ.வ.வேலு எல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. அம்மாவின் பெயரைச் சொல்லி ஓட்டுக் கேட்போம். குடும்பத்தையும், அரசியலையும் ஒரு பெண்ணாக இருந்து கொண்டு எப்படி பேலன்ஸ் செய்வீர்கள் எனக் கேட்கிறீர்கள்.''
''ஏன் எத்தனையோ பெண்கள் சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துக்கொண்டு அரசியலையும், குடும்பத்தையும் பேலன்ஸ் செய்யவில்லையா. அது போல் நானும் இரண்டையும் பார்த்துக்கொள்வேன்.'' என படபடவென பேசி முடித்தார் ஜெயசுதா.












Click it and Unblock the Notifications