ஆச்சரியம்.. ரேவதிக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் பிறந்த குழந்தை!
ஆம்புலன்சில் 2-வது முறையாக இளம்பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார்
திருவண்ணாமலை: ரேவதி என்ற இளம்பெண்ணுக்கு 2-வது முறையாக ஆம்புலன்சில் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த கரிக்கலாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவர் ஒரு விவசாயி. இவரது மனைவி ரேவதி. 29 வயதாகிறது. இந்த தம்பதியருக்கு ஏற்கனவே 2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கர்ப்பிணியாக இருந்த ரேவதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள கொளத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்து சென்றனர்.
அங்கு டாக்டர் பரிசோதனை செய்ததில் ரேவதிக்கு பனிக்குடம் உடைந்துவிட்டதால், மேல்சிகிச்சைக்காக உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
அதன்படி ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ரேவதிக்கு பிரசவ வலி அதிகரித்தது. கீழ்பென்னாத்தூரை கடந்து சென்றபோது, மருத்துவ உதவியாளர் குமரன், ரேவதிக்கு பிரசவம் பார்த்தார்.
இதையடுத்து, ஆம்புலன்சிலேயே ரேவதிக்கு சுகப்பிரசவம் ஆனது. அழகான ஆண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும், சேயும் திருவண்ணாமலை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக இருக்கிறார்கள்.
இதில் என்ன ஒரு விசேஷம் என்றால், 2 வருஷத்துக்கு முன்பும், ரேவதிக்கு முதல் பிரசவத்துக்கு அழைத்து சென்றபோது, ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தள்ளது. அப்போதும் ஆம்புலன்சில் வந்த மருத்துவ உதவியாளர் குமரன்தான் ரேவதிக்கு பிரசவம் பார்த்தாராம்!












Click it and Unblock the Notifications