பாத்திமா தற்கொலை அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள்.. திருவாரூர் மத்திய பல்கலை.யில் மாணவி தற்கொலை
திருவாரூர்: திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் ஒசூரை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மத்திய பல்கலைக்கழகம். இங்கு ஒசூரை சேர்ந்த மைதிலி பி எஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தனது விடுதியில் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து நன்னிலம் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து மைதிலியின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

விரும்பவில்லை
இதுகுறித்து அவருடன் தங்கியுள்ள மாணவிகளிடம் கேட்ட போது நேற்று இரவு உணவு அருந்த மைதிலியை அழைத்தோம். ஆனால் அவர் வரவில்லை. தனக்கு உணவு உண்ண விரும்பவில்லை என கூறிவிட்டதாக மாணவிகள் தெரிவித்தனர்.

தூக்கிட்டு தற்கொலை
சக மாணவிகள் சாப்பிட்டுவிட்டு அறைக்கு வந்த போது அறை உள்பக்கம் தாழிட்டபடியே இருந்தது. கதவை தட்டியும் மைதிலி திறக்காததால் சந்தேகமடைந்த மாணவிகள் ஜன்னல் வழியாக பார்த்த போது மைதிலி தூக்கிட்டு தற்கொலை செய்திருந்தார்.

விசாரணை
மைதிலியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அது போல் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

என்ன ஆனது
சென்னை ஐஐடியில் கேரளா மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் மாதம் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மைதிலியின் தற்கொலை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நன்னிலம் போலீஸார் பேராசிரியர்களிடமும் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications