திருவாரூரில் கட்சி நிர்வாகிகளை நாளை சந்திக்கிறார் முதலமைச்சர்... மகிழ்ச்சியில் உடன்பிறப்புகள்..!
திருவாரூர்: முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக இன்று திருவாரூர் செல்கிறார் ஸ்டாலின்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று பிற்பகல் திருச்சி செல்லும் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் பயணிக்கிறார்.
திருவாரூர் பயணத்தின் முதல் நிகழ்வாக காட்டூரில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துகிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அதைத் தொடர்ந்து ஓய்வெடுக்கும் அவர் நாளை காலை திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவத்திற்கான பிரத்யேக கட்டிடத்தை திறந்து வைக்கிறார்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார். அதைத் தொடர்ந்து திருக்குவளைக்கு புறப்பட்டுச் செல்லும் அவர், அங்கு மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்து வளர்ந்த இல்லத்தை பார்வையிடச் செல்கிறார்.
இதையடுத்து திமுக நிர்வாகிகளை அங்கு சந்தித்து பேசவிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இதுவரை சேலம், கோவை, திருப்பூர், திருச்சி, என பல்வேறு ஊர்களுக்கும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்ற போது கட்சியினரை சந்திக்க வரவேண்டாம் எனக் கூறியிருந்ததோடு வந்தவர்களையும் முதலமைச்சர் சந்திக்கவில்லை.
இதற்கு காரணம் கொரோனா கால ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதனை மீறும் வகையில் நடந்துக்கொள்ளக்கூடாது என்பதே. இப்போது கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் வந்திருப்பதாலும், ஊரடங்கில் தளர்வுகள் தரப்பட்டுள்ளதாலும் தமிழகத்தில் 80% இயல்புநிலை திரும்பியுள்ளது.
இந்நிலையில் முதலமைச்சராகிய பிறகு திமுக நிர்வாகிகளை திருவாரூரில் ஸ்டாலின் முதல்முறையாக சந்தித்து பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதனால் திருவாரூர், தஞ்சை மாவட்ட திமுக நிர்வாகிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications