ஆளுநர் டெல்லி போய்ட்டாரு.. “ஆர்டிகிள் 356”.. திமுக ராசியே இதான்.. ஜெயக்குமார் பரபர பேட்டி!
திருவள்ளூர்: தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுகவில் இருக்கும் துச்சாதனன், சகுனி போன்றோரே அந்த கட்சியை வீழ்த்தி விடுவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் அதிமுக சார்பில் எம்.ஜி.ஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் எம்.ஜி.ஆர் இ-சேவை மையம் ஆகியவற்றை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், "பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படாது.

தமிழ்நாட்டிலே அவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறது. விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, செந்தில் பாலாஜியை காப்பாற்ற நினைப்பது இப்படி பல பிரச்சனைகள் உள்ளூரில் இருக்கும்போது, முதல்வர் ஸ்டாலின் பாட்னா செல்வது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. உள்ளூரிலே ஓணான் பிடிக்காத ஆளு, நான் போய் புலியை பிடிக்கிறேன் என்ற கதையாக உள்ளது.
அரசியலைப் பொறுத்தவரை நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை. பலரும் ஒன்று கூடி உள்ளார்கள். இது தொடருமா என்பதுதான் கேள்விக்குறி. கூடிவிட்டு எல்லோரும் கையைத் தூக்கிவிட்டதால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று மட்டும் எண்ணாதீர்கள்." என்று தெரிவித்துள்ளார்.
மேலும், "மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால் அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் ஏற்படலாம். தேர்தல் நெருங்கும்போது திமுக கூட்டணியில் இருக்கும் பல கட்சிகள் வெளியேறி அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது. திமுகவில் இருக்கும் துச்சாதனன், சகுனி போன்றோரே அந்த கட்சியை வீழ்த்தி விடுவார்கள்.
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் கடுமையான கெட்டப்பெயர் ஏற்பட்டுள்ளது. ஆளுநரும் டெல்லி சென்றுவிட்டார். ஆட்சியின் அவல நிலை பற்றிய ரிப்போர்ட்டை உள்துறை அமைச்சரிடமும், பிரதமரிடமும் ஆளுநர் கொடுக்கலாம். தமிழ்நாட்டில் 356-சட்டப்பிரிவை பயன்படுத்தினால் மக்கள் ரொம்ப சந்தோஷப்படுவார்கள். திமுக ஆட்சியின் ராசியே டிஸ்மிஸ் ஆவதுதான்." என்றார்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "தேவையில்லாத பெட்டிகளை கழற்றி விட்ட பின்னர், ரயில் என்ஜின் போன்று அதிமுக சென்று கொண்டிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் வந்துக்கொண்டிருக்கிறார்கள். இனி கூட்டத்தைச் சேர்ப்பது எந்த பயனையும் ஏற்படுத்தாது. தொண்டர்கள் ஆதரவு இருப்பதால் தான் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக இருக்கிறார். நானும் இருக்கிறேன் என்று காட்டுவது போன்று கூட்டத்தை ஓபிஎஸ் நடத்துகிறார்" என்று தெரிவித்தார்.
மேலும், "திமுகவிற்கு இனி ஒவ்வொரு மாதமும் கைது மாதம் தான். அமலாக்கத்துறை சோதனையில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட எவரும் தப்ப முடியாது. மதுக்கடைகளை படிப்படியாக மூடுவோம் என தெரிவித்தனர். 500 மதுக்கடைகளை மூடி தற்போது புதிய கடைகளை திமுகவினர் ஆங்காங்கே திறக்கின்றனர்" என்று தெரிவித்தார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications