கமலா ஹாரிஸ் பூர்வீக கிராமத்தில் கண்ணீர் விட்டு கதறியழுத அமெரிக்க பெண்- அதிர்ச்சியில் பொதுமக்கள்!
திருவாரூர்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வியைத் தழுவினார். கமலா ஹாரிஸின் வெற்றி செய்தியை எதிர்பார்த்திருந்த அவரது பூர்வீக கிராமமான மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராம மக்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. துளசேந்திரபுர கிராமத்துக்கு வருகை தந்திருந்த அமெரிக்கர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
கமலா ஹாரிஸின் தாய்வழி பூர்வீக கிராமம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம். அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டது முதலே இந்த கிராமம் மகிழ்ச்சியில் திளைத்திருந்தது. கமல ஹாரிஸ் வெற்றிக்காக வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. கமலா ஹாரிஸ் தாய்வழி குடும்பத்தின் குலதெய்வமான தர்மசாஸ்தா கோவிலில் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. மேலும் கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் சிலர், அமெரிக்காவில் இருந்து துளசேந்திரபுரம் கிராமத்துக்கு வருகை தந்து முகாமிட்டும் இருந்தனர்.

அமெரிக்கா அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் தொடக்கம் முதலே கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்தார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றிக்கு தேவையான 270 எலக்ட்டோரல் வாக்குகளுக்கும் அதிகமாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் பெற்று வென்றார். அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளார் டொனால்ட் டிரம்ப்.
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்த செய்தி துளசேந்திரபுரம் கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்தது. அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் டிவி முன்பு அமர்ந்து கூட்டம் கூட்டமாக பார்த்து வந்த துளசேந்திரபுரம் கிராம மக்கள், கமல ஹாரிஸ் தோல்வியால் அதிர்ச்சியில் உறைந்தனர். அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். கமலா ஹாரிஸின் தோல்வியைத் தாங்க முடியாத அமெரிக்காவில் இருந்து வந்த ஆதரவாளர்களும் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இருந்த போதும் அடுத்த தேர்தலில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவார்; நிச்சயம் அந்த தேர்தலில் அவர் வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கையை துளசேந்திரபுரம் கிராம மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.












Click it and Unblock the Notifications