லகானை பிடித்த அன்பில் மகேஷ்.. “ஒருவன் ஒருவன் முதலாளி”.. குதிரை வண்டியில் ஏறி சீறிப்பாய்ந்த அமைச்சர்!
திருவாரூர் : திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பின்னர், குதிரை வண்டியில் ஏறி, உற்சாகமாக ஓட்டிச் சென்றார். சுமார் 2 கி.மீ தூரம் வரை குதிரை வண்டியில் சென்று, மற்றொரு அரசுப் பள்ளியில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பசுமை பள்ளி திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் வேளாண்மை துறைகளில் சிறந்து விளங்க முடியும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
நானும் உதயநிதியும் விளையாடிய மைதானம்.. அப்போ நாங்க எதிரணி.. நினைவுகள் பகிர்ந்த அன்பில் மகேஷ்!
திருவாரூர் அரசுப் பள்ளி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்தப் பள்ளியில் இன்று தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக பசுமை பள்ளி திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
பசுமை பள்ளி திட்டம்
அதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சொட்டுநீர் பாசன முறையிலான காய்கறி தோட்டத்தை நேரில் பார்வையிட்டார். சிறுவகை மீன்கள் வளர்ப்பதற்கான பண்ணை குட்டையை திறந்து வைத்து மீன் குஞ்சுகளை நீரில் விட்டார். பசுமை பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பின்னர் பள்ளி மாணவர்களுக்கு விவசாய வேளாண் கருவிகளை வழங்கினார்.
குதிரை வண்டி ஓட்டிய அமைச்சர்
அதைத் தொடர்ர்ந்து திருவாரூர் திமுக எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் ஏற்பாடு செய்திருந்த குதிரை வண்டியில் ஏறி உற்சாகமாக குதிரை வண்டியினை ஓட்டிச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. 2 கிலோ மீட்டர் தூரம் வரை கொரடாச்சேரி கடை தெரு வழியாக குதிரை வண்டியில் சென்று கொரடாச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இரண்டாவதாக பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
இந்தியாவிலேயே முதன்முறையாக
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கக்கூடிய விவசாய பிரிவு மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டம் இந்தியாவில் தமிழ்நாட்டில் முதல்முறையாக திருவாரூர் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் வேளாண்மை துறைகளில் சிறந்து விளங்க முடியும்.
500 பள்ளிகளில்
முதற்கட்டமாக 500 பள்ளிகளில் இந்த திட்டத்தை கொண்டு வர போகிறோம். மேலும் மேல்நிலைப் பள்ளிகள் மட்டுமில்லாது உயர்நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும் இந்த திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டம் அனைவராலும் பாராட்டப்பெறும் திட்டமாக அமையும் என நம்புகிறேன். மேலும் காலை உணவு திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்." எனத் தெரிவித்தார்.