மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரம்.. நடுரோட்டில் மாணவி மற்றும் சகோதரியை தாக்கிய பாஜகவினர்!
திருவாரூர் : மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்களை வழங்கிய மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா மற்றும் அவரது அக்கா நந்தினி ஆகியோரை திருவாரூரில் பாஜகவினர் தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் மதுரையைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவி நிரஞ்சனா மற்றும் அவரது சகோதரி நந்தினி ஆகியோர் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.

நாட்டை பற்றி சிந்திப்போம் என்ற பெயரில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகளுக்கு நந்தினியும், நிரஞ்சனாவும் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொண்டிருந்தனர்.
இதை பற்றி கேள்விப்பட்ட உடன் பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் உடனே அங்கு சென்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. எப்படி நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வழங்கலாம் என்று பாஜகவினர் சத்தம் போட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி கைகலப்பாக மாறியது.

நந்தினி மற்றும் நிரஞ்சனாவை பாஜகவினர் தாக்கினார்கள், பதிலுக்கும் அவர்களும் பாஜகவினரை தாக்கினார்கள். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த தகவலை அறிந்த திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விரைந்து வந்து, மாணவி நிரஞ்சனா மற்றும் நந்தினியை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் திருத்துறைப்பூண்டி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications