விவசாய சங்க தலைவர் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை.. ஓஎன்ஜிசி வழக்கில் திருவாரூர் கோர்ட் அதிரடி
திருவாரூர்: தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக பிஆர் பாண்டியன் உள்ளார். இந்நிலையில் தான் 2015ம் ஆண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவாரூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் பிஆர் பாண்டியன். இவர் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவின் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார். விவசாயிகள் நலன் சார்ந்து ஏராளமான போராட்டங்களை முன்னின்று நடத்தி வருகிறார்.

குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் காவிரி நீர் பங்கீடு, மேகதாது அணை எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலையங்கள் மேம்பாடு உள்பட பல்வேறு விவசாயிகள் சார்ந்த பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருவதோடு, போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் கடந்த 2015ம் ஆண்டில் திருவாரூர் மாவட்டத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. மத்திய அரசின் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுப்பதற்கான கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டது.
இதற்கு எதிராக பல்வேறு விவசாய அமைப்பினர் போராட்டம், உண்ணாவிரதம் போராட்டத்தை நடத்தினர். அப்போது பிஆர் பாண்டியன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியது உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன்பிறகு அவர்கள் ஜாமீனில் வெளியே வந்தனர்.
இருப்பினும் இந்த வழக்கு திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சாட்சியங்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் இந்த வழக்கில் இன்று திருவாரூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தின்போது பொதுச்சொத்துகளை சேதப்படுத்தியதாக கூறி பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இது பிஆர் பாண்டியனுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications