புதிய சர்ச்சையில் அதிமுக மாஜி காமராஜ்.. “கொலை முயற்சி” - திருவாரூர் எஸ்பியிடம் பரபரப்பு புகார்
திருவாரூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் உள்பட 3 பேர் மீது பண மோசடி மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழவாளாச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள சுப்புலட்சுமி என்பவருக்கு சொந்தமான வீட்டை ரூ.60 லட்சம் கொடுத்து வாங்கியுள்ளார்.
அதன்பின்னர் சுப்புலட்சுமி வீட்டை காலி செய்யாமல் காலம் தாழ்த்தி உள்ளார். வீட்டை காலி செய்வது தொடர்பாக கடந்த 2009 ஆண்டு முன்னாள் அமைச்சர் காமராஜின் மைத்துனரான ராமகிருஷ்ணன் மூலம் ரூ.15 லட்சம் கொடுத்து இருக்கிறார்.

அமைச்சர் காமராஜ் உறுதி
2011 ஆம் ஆண்டு அமைச்சர் காமராஜை அவரது வீட்டில் சந்தித்து ரூ.10 லட்சமும் கொடுத்துள்ளார். மூன்று மாதத்தில் காலி செய்யப்படும் என்று காமராஜ் உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நன்னிலம் தொகுதி அதிமுக வேட்பாளராக ஆர்.காமராஜ் அறிவிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் செலவுக்கு ரூ.20 லட்சம் கடனாக தரும்படி ராமகிருஷ்ணன் கேட்டுள்ளார்.

மிரட்டல்
அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவிக்க முடியாமல், ரூ.20 லட்சம் பணத்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள காமராஜ் வீட்டில் வைத்து ராமகிருஷ்ணனிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கூறியபடி வீட்டை காலி செய்து கொடுக்காமல், தன்னிடம் பெற்ற பணத்தையும் திரும்பித் வரவில்லை என்றும், இது குறித்து முன்னாள் அமைச்சர் காமராஜ் தரப்பினரிடம் கேட்டபோது அவர்கள் தன்னை மிரட்டியதாகவும் குமார் தெரிவித்து உள்ளார்.

கொலை முயற்சி
இது தொடர்பாக மன்னார்குடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது தொடர்பாக மன்னார்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முறையீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்ட முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரிடம் இருப்பவர்கள் அடிக்கடி தகாத வார்த்தைகளை சொல்லி தனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும், கடந்த ஜூலை 7 ஆம் தேதி குமாரின் வீட்டிற்கு சென்று கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

மாவட்ட எஸ்பியிடம் புகார்
இதையடுத்து கொலை முயற்சியில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது ரூ.45 லட்சம் பணத்தை பெற்று தர வேண்டும் என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து குமார் புகார் அளித்தார். புகாரை பெற்று கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications