1 நெல் மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன்.. 4 ஆண்டுகளில் பல கோடி.. விவசாயிகள் வயிற்றில் அடிக்காதீங்க.. திருவாரூரில் விஜய்
திருவாரூர்: திருவாரூரில் பேசிய விஜய், விவசாயிகளிடம் இருந்து இந்த திமுக அரசு கமிஷன் அடித்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார். குறிப்பாக, ஒரு நெல் மூட்டைக்கு அரசாங்கம் கொடுக்கிற ₹10 போக கூடுதலாக ₹40 கமிஷன் அடிக்கிறார்கள் என்றும், கடந்த நான்கரை ஆண்டுகளில் பல கோடி ரூபாய் விவசாயிகளிடம் இருந்து கமிஷன் அடித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
நாகையை தொடர்ந்து, இன்று மாலை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருவாரூரில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழ்நாட்டு தேரை நகர விடாமல்
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. திருவாரூர் என்றாலே திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆடித்தேர்தான் உடனே மனுஷனுக்கு வரும். திருவாரூர் தேரென்றால் சும்மாவா வாங்க... இந்த மண்ணோடைய அடையாளம் ஆச்சே. ரொம்ப நாட்களாக ஓடாமல் இருந்த திருவாரூர் தேரை ஓடவைத்தது நான்தான் என்று மார்தட்டிக்கொள்ளும் நபர் யார் என்று எல்லாருக்கும் தெரியும்.
ஆனால் அவரோட மகன், மாண்புமிகு சிஎம் சார் இப்போ என்ன செய்றாங்க? நல்லா ஓடும் தமிழ்நாடு என்ற தேரை நான்கு பக்கமும் கட்டையடிச்சு நிப்பாடி, ஆடாமல் அசையாமல், அப்படியே நிப்பாட்டிவிட்டார் ஸ்டாலின். இதை பெருமையாக வேற சொல்லிக்கொள்கிறார். திருவாரூர் மாவட்டம் தான் அவர்கள் சொந்த ஊராக சொல்லிக்கொள்கிறார். ஆனால் திருவாரூர் கருவாடா காய்ந்து கிடக்கிறது. நாகையைப் போல் திருவாரூரிலும் அதிகமாக குடிசைப்பகுதிகள் நிறைந்த மாவட்டமாக உள்ளது.
ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கிறார்
எல்லா இடத்துக்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீங்க. மெரினாவில் உங்க அப்பாவுக்கு பேனா சிலை வைக்க வேண்டும் என்று சொல்றீங்க. ஆனால் உங்க ஊர் என்று சொல்லிக்கொள்ளும் திருவாரூரில் சாலை வசதிகள் நல்லா இருக்கா? இங்க இருக்கிற பல்கலைக்கழகத்தில் எல்லா வசதிகளும் இருக்கா? இங்கே இருக்கிற மெடிக்கல் கல்லூரிக்கே வைத்தியம் பார்க்கின்ற கண்டிஷனில்தான் இருக்கு. திருவாரூர் பஸ் ஸ்டாண்டுக்கு தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு நல்ல சாலை கூட கிடையாது.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவருடைய வேலை என்னன்னு தெரியுமா? சிஎம் சார் குடும்பத்துக்கு சேவை செய்வது தான். அவருக்கு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதை நாம் உணர்த்துவோம். "உங்களுடன் ஸ்டாலின், உங்களுடன் ஸ்டாலின்" என்று நீங்க மட்டும் தான் சொல்லிக்கொள்ள வேண்டும். உங்களுடன் ஸ்டாலின் கிடையாது, குடும்பத்துடன் ஸ்டாலின்.
விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன்
டெல்டா விவசாயிகள் ஒரு கொடுமையை அனுபவித்து வருகிறார்கள். அது என்ன என்றால், நெல் கொள்முதல் மையங்களில் நெல் மூட்டைகளை ஏற்றி இறக்குவதற்கு ஒரு மூட்டைக்கு ₹40 கமிஷன் வாங்குகிறார்கள். அரசே ₹10 கொடுக்கும் போதும், இவர்கள் கூடுதலாக ₹40 கமிஷன் வாங்குகிறார்கள். ஒரு டன்னுக்கு ₹1,000 கமிஷன் வாங்குகிறார்கள். நீங்க கணக்கு போட்டு பாத்தீங்க என்றால், பல கோடிகள் கமிஷனாக புடுங்கி இருக்கிறார்கள்.
இதை வேறு யாரும் சொல்லியிருந்தால் நான் நம்பியிருக்க மாட்டேன். ஆனால் இதை சொன்னதே விவசாயிகள் தான். விவசாயிகள் பொய் சொல்ல மாட்டாங்க சிஎம் சார்.. இதை உங்க ஆட்சியில் நடந்து இருக்கிறது. உங்களுக்கு வேண்டும் என்றால் "40க்கு 40" என்பது எலக்ஷன் ரிசல்ட் ஆக இருக்கலாம். ஆனால் இங்கே உள்ள விவசாயிகளுக்கு "40க்கு 40" என்பது விவசாயிகள் வயிற்றில் அடித்த கமிஷன். இவ்வாறு விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications