கனமழை எச்சரிக்கை.. திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. வருவாய் அலுவலர் அறிவிப்பு!
திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர்: கனமழை எச்சரிக்கை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் குறைந்தக் காற்றழுத்தத் தாழ்வு காரணமாக நாளை கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை இலங்கை- திரிகோண மலைக்கும், மட்டக்களப்பிற்கும் இடையே கரையை கடந்தது. இது மேலும் தென்மேற்கு திசையில் நகர்ந்து குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நாளை காலை நிலவக்கூடும்.
மிக கனமழை..ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களே உஷார்..சூறாவளியும் வீசுமாம்!
ஆரஞ்சு எச்சரிக்கை
இதன் காரணமாக நாளை தென்தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே இந்த 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை
அதேபோல் சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், ராமநாதபுரம் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் விடுமுறை
இதன் காரணமாக இன்றே பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல் திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை
ஏற்கனவே இன்று திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. தற்போது நாளையும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்தடுத்து பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகிறது.