4 வருட பகை.. மின் தடையால் ஆள் மாற்றி கொலை.. திருவாரூரை அதிர வைத்த கோரம்
திருவாரூர்: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள். கொலை, கொள்ளை, போதை மருந்து பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருப்பதாக புகார் சொல்லப்படுகிறது. இந்நிலையில் திருவாரூரில் 4 வருடங்களுக்கு முன்பு ஒரு கொலை சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவத்திற்காக பழிவாங்க திட்டமிட்டபோது மின் தடை காரணமாக ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கவியரசன். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டார். முன் விரோதம் காரணமாக பாஜக இளைஞரணியைச் சேர்ந்த காளிதாஸன் என்பவர் தான் கவியரசனை கொலை செய்திருந்தார்.

விசிக பிரமுகர் கொலை
இந்த அரசியல் கொலை மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக காளிதாஸ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் கிடைத்தது. இதன் காரணமாக காளிதாஸ் கடந்த சில மாதங்களுக்கு சிறையில் இருந்து வெளிவந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளார்.
காளிதாசும் அதே அம்மையப்பன் பகுதியைச் சேர்ந்தவராவார். இதையடுத்து அந்தப் பகுதியில் அவர் சகஜமாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இது கவியரசன் நண்பர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. ஏற்கெனவே கவியரசனின் கொலைக்கு அவர்கள் காளிதாஸை பழிவாங்க திட்டமிட்டனர். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் பணி செய்து வரும் நந்தகுமார் என்பவருடன், காளிதாஸ் பேசி வந்துள்ளார்.
சொதப்பிய ஸ்கெட்ச்
இருவரும் நேற்று முன்தினம் பேருந்து நிலையம் அருகே பேசிக் கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனடியாக கண் இமைக்கும் நேரத்தில் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் அவர்களை சுற்றி வளைத்துள்ளது. சுதாரிப்பதற்குள் அவர்கள் நந்தக்குமாரை படுகொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கூறுகையில், "காளிதாஸ் சிறையில் இருந்து வெளி வந்ததில் இருந்தே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வந்துள்ளனர்.
மின் தடை
அன்றைய தினம் அவர்கள் நெருங்கும்போது, மின்சாரம் தடைபட்டுள்ளது. உடனடியாக காளிதாஸ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். கொலையாளிகள் அடையாளம் தெரியாமல் நந்தகுமாரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இளையராஜா, துரை ராஜ், ஹரிஹரன், மணி தேவா, தோனி, சிற்றரசன் ஆகிய 6 பேர் காவல்துறையிடம் சரணடைந்துள்ளனர்.
இதில் இளையராஜா என்பவர் கொலைக்கு மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் மீது தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர். மின் தடையால் ஆள் மாற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications