திருப்பதி நிர்வாகத்துக்கே விபூதி அடிக்க பார்த்த 'விஐபி' கும்பல்.. யாரு சாமி நீங்க.. ஆடிப்போன போலீஸ்
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கே விபூதி அடிக்க பார்த்த கும்பல் குறித்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுடன் வந்த விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 பக்தர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பக்தர் ஏ.சீனிவாஸ் என்பவர் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடிவு செய்தார். இதற்காக சீனிவாஸ், திருப்பதியைச் சேர்ந்த ரகுசாய்தேஜா என்பவரை நண்பர் மூலம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அத்துடன் தனக்கு 4 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் வேண்டும், என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு ரகுசாய்தேஜா, நான் திருமலையில் உள்ள லட்டு கவுண்ட்டரில் வேலை செய்து வருகிறேன். உங்களுக்கு தேவையான வி.ஐ.பி. பிரேக் தரிசனத்துக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். தொடர்ந்து ரகுசாய்தேஜா கூறியபடியே கடந்த மே 25 மற்றும் 26-ந்தேதிகளில் 'போன் பே' மூலம் சீனிவாஸ் 4 வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுக்கு மொத்தம் ரூ.17 ஆயிரத்தை அனுப்பி வைத்துள்ளார்.
இந்நிலையில் ரகுசாய்தேஜா பழைய வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை சேகரித்து அதில் உள்ள பெயர்கள், தேதி போன்ற விவரங்களை மாற்றி, போலியாக வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை உருவாக்கி இருக்கிறார். பின்னர் போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளை வாட்ஸ்அப் மூலம் பக்தர் சீனிவாசுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்
அந்த வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுடன் நேற்று முன்தினம் காலை திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ் வளாகத்துக்கு சீனிவாஸ் உள்ளிட்ட 4 பக்தர்கள் சாமி தரிசனத்துக்காக வந்திருக்கிறார்கள். அந்தத் தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, அவை, போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகள் என்பது உறுதியானது.
இதையடுத்து திருப்பதி திருமலை தேவஸ்தான ஊழியர்கள், சீனிவாஸ் உள்பட விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த 4 பக்தர்களை பிடித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்கள். விஜிலென்ஸ் அதிகாரிகள் 4 பேரையும் திருமலை 1-டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து பக்தர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களுக்கு போலி டிக்கெட் எடுத்து கொடுத்தவரை பிடித்து விசாரிக்கப்படுவார் என்றும் கூறினார்கள். திருப்பதியில் போலி வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட்டுகளுடன் பக்தர்கள் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications